திங்கள், 31 டிசம்பர், 2018

விடைபெற்று வா 2018!


ஒவ்வொரு வருடம் முடிவுரும் போதும் நாம் அந்த ஆண்டு நம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு தருணம் ஒன்று அமைந்து விடுகிறது. அவ்வாறு 2018 ஆம் ஆண்டில் என் வாழ்வில் நான் கடந்து வந்த சில சம்பவங்களை, நிகழ்ந்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு பதிவே இக்கட்டுரை.

2018 எனக்கு எப்படி இருந்தது என்பதை விட தமிழ்நாட்டுக்கு எப்படி இருந்தது என்று பார்த்தால் நானும் அதற்குள் அடங்கிவிடுவேன் என்று நினைக்கிறேன். ஏன் என்பது கட்டுரைக்குள் செல்லும் போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். 

2018 ஆரம்பமானது எனக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தான்ஒரு திரைப்படத்தில் துணை இயக்குனராக வேலை செய்ய ஒரு திரைப்பட இயக்குனரை சந்திக்க சென்றிருந்தேன்அது ஒரு ஏமாற்று கும்பல் என்பது அவர்களை சந்தித்து சென்னைக்கு திரும்பிய வரை எனக்கு தெரியாதுஇத்தனை நாட்களில் படப்பிடிப்பு துவங்குகிறது என்றும்நீங்கள் அந்த தேதியில் வந்து விடுங்கள் என்றும் கூறினார்கள்சரி என்றேன்ஒரு 2800 ரூபாயை முன் பணமாக செலுத்த வேண்டும் என்றார்கள்காரணம் கேட்டதற்கு நிறைய பேர் இங்கு வேலை செய்ய வருவதாக கூறிவிட்டு பாதியிலேயே சென்று விடுகிறார்கள்அதை தவிர்க்க இது ஒரு டெப்பாசிட் பணம் பெறும் முறை என்று சொன்னார் அந்த சினிமா இயக்குனர்சரி என்று இருந்த காசை எல்லாம் சேர்த்து 2800 ரூபாய் கொடுத்துவிட்டு சென்னைக்கு வந்தேன்அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு என்றார்கள்ஆனால் சென்னைக்கு வந்த பிறகு தான் தெரிந்தவர்கள் சொன்னார்கள் அவர்கள் இதற்கு முன்பும் இது போல பலரிடம் பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் என்றுஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது இந்த ஆண்டு


திருநெல்வேலிக்கு செல்லும் முன், கோயம்பேடு பேருந்து நிலையம், 31-12-2017 மாலை

ஆனால் போகப் போக பொது வாழ்வில் நல்ல பல அனுபவங்களை தந்தது எனக்கு 2018 தான் என்று சொல்ல வேண்டும்.

ஜனவரி மாதம் பொங்கல் அன்று இரவு மிக துயரமான அதிர்ச்சி அளிக்கும் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. எழுத்தாளர் ஞாநி இறந்துவிட்டார் என்ற செய்தியை அழுதபடி என் சகோதரி எனக்கு இரவு 2.00 மணியளவில் சொன்னார். உடனே கிளம்பி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டோம். பலருக்கும் ஒரு தூணாகவும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய நபராகவும் இருந்த அவரது மறைவு 2018-ல் ஈடு செய்ய முடியாது ஒரு இழப்பு என்று தான் சொல்வேன்.

ஜனவரி மாதம் கடைசி வார இறுதியில் சென்னையில் மையம் கலைக்குழு நடத்திய இரண்டு நாள் பறையாட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டதில் எனது நீண்ட நாள் பறை வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறியது. ஒரு பறையிசை கலைஞனாகவும் ஆனேன். பறையிசை பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. சொந்தமாக ஒரு பறையும் வாங்கிவிட்டேன். பிறகு பறையிசை குறித்த எனது வலைப்பதிவையும் பதிவேற்றினேன்



பறையாட்ட பயிற்சி முகாமில்


மே17 இயக்கத்தில் தன்னார்வலராக செயலாற்றி வந்த தருணம் அப்போது. தோழர்கள் ஒரு சந்திப்பின் போது அடுத்த சில வாரங்களில்வெல்லும் தமிழீழம்மாநாடு சென்னையில் இருக்கிறது என்றார்கள். மிக குறுகிய காலத்தில் ஒரு மாநாடு என்பதால் களப்பணிகளில் தோழர்களோடு இணைந்து வேலை செய்த மனநிறைவை தந்தது அந்த மாநாடு.

மாநாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேலையிலேயே காவேரி நதி நீர் இறுதி தீர்ப்பு வெளி வந்தது. ஆக மாநாடு முடிந்த அடுத்த சில தினங்களிலேயே காவேரி உரிமை மீட்பு பொதுக்கூட்டங்கள், அதற்கான களப்பணி, பெரியார் சிலை உடைப்பு பிரச்சினை என நிறைய அரசியல் சார்ந்த போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினேன். குறிப்பாக காவேரி நதி நீர் பிரச்சினை தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்பதால் அதன் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டேன்.

குறிப்பாக சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம், பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்வினையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு, மோடிக்கு கருப்பு கோடி போராட்டம், .பி.எல் எதிர்ப்பு போராட்டம் என ஏப்ரல் மாதம் மட்டும் தமிழர் உரிமைக்காக பல முறை கைதாகி விடுதலையான அனுபவங்கள் நிகழ்ந்தது

காவேரி உரிமை மீட்பு சுவரொட்டி


காவேரி நதி நீர் பிரச்சினை தீர்வதற்குள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு முக்கிய பிரச்சினையாகி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்த எனக்கு போராட்டம் செய்தவர்களை சுட்டுக் கொன்றது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு வரை ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவுகளையும் பிரச்சாரங்களையும் செய்து வந்த நான் ஸ்டெர்லைட் பிரச்சினையை ஆவணம் செய்ய வேண்டும் என எண்ணினேன். துப்பாக்கிச்சூடு நடந்த சில தினங்களில் தூத்துக்குடிக்கு கேமரா எடுத்துக் கொண்டு சென்றுவிட்டேன். தூத்துக்குடியின் கள நிலவரம் என்ன என்பதையும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கான மக்களின் நீண்ட நாள் போராட்ட வரலாற்றையும் ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முடிந்தது.


ஆவணப்படம் தயாரிக்கும் பணிகளில் தற்போது இருக்கிறேன். நிதி சிக்கல் காரணமாக தயாரிப்பு வேலைகள் தற்சமயம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு, தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு சென்று வந்த பிறகு தொடர்ந்து பல களப் பணிகளில் இருந்ததால் ஒரு மாறுதல் தேவை பட்டது. ஒரு மாத காலம் நகரம், வேலை என இல்லாமல் என்னை உணர்ந்து கொள்ள தனிமையும் இயற்கை சூழலும் தேவைப்பட்டது. தோழர் ஒருவர் மூலமாக திருவண்ணாமலை அருகே குக்கூ காட்டுப் பள்ளி என ஒரு இடம் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று சில நாட்கள் இருந்தேன். இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு சூழல். புளியானூர் என்ற அழகான கிராமத்தில் அமைந்திருக்கிறது அந்த பள்ளி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அப்படியான ஒரு சூழலில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி பெட்டி அங்கு கிடையாது. ஜவ்வாது மலையடிவாரம், அந்த பக்கம் காடு, காட்டுப் பள்ளி வளாகத்தில் நாற்றங்கால்(nursery) பணிகள், ஜென் தோட்டம், வாழ்வின் பல நிலை மனிதர்கள் என ஒரு சிறந்த அனுபவமாக அந்த பயணம் அமைந்தது

புளியானூர் கிராம குழந்தைகள்

ஜவ்வாது மலைக் காடு, குக்கூ காட்டுப்பள்ளி அருகில்

அங்கிருந்து வந்த பிறகு நாம் இவ்வளவு காலமாக எப்படியான ஒரு சிக்கல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர முடிந்தது. பயணங்கள் செய்ய ஆரம்பித்தேன். சிக்மகளூர், மேட்டூர், ஒக்கேனக்கல் என பயணம் தொடந்தது. கேரளா பெரு வெள்ளத்திற்காக தன்னார்வ தொண்டு செய்ய சில நாட்கள் கேரளா சென்றேன்

இயற்கையின் கரங்கள் நமக்காக எவ்வளவு பறந்து விரிந்து கிடக்கிறது என்பதை பயணம் செய்யும் போது உணர முடிகிறது. குறிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் காவேரி நதி நீருக்காக சாலை மறியல், முற்றுகை போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என பாடு பட்டதற்கு பலனாக மேட்டூர் அணையில் நீர் நிறம்பியதை காணும் போதும், காவேரி நதியில் குளித்த போதும் மனம் அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது. இயற்கையை ஒன்றிய வாழ்வே உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு என்பதை உணர முடிந்தது பல தருணங்களில். 

Hirekolale Lake, Chikmagalur(சிக்மகளூர்)

ஓனம் பண்டிகை வரவேற்பு - கோழிக்கோடு பேருந்து நிலையம், கேரளா

ஹொக்கேனக்கல் அருவி - தருமபுரி, தமிழ்நாடு

கேரளாவில் இருந்து வந்த பிறகு சொந்தமாக தொழில் செய்ய எண்ணி ஒரு கார் வாங்கினேன். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்ததால் அந்த கார்-ஐ திரும்ப கொடுத்து விட்டேன்.

இழப்புகள், பொதுவாழ்வு, களப்பணி, வாழ்வை மாற்றக்கூடிய அனுபவங்கள், இயற்கை சூழல், பயணம் என இப்படியாக சில அனுபங்கள் இந்த வருடம் அமைந்தது எனக்கு.

தேவதை போன்ற ஒரு பெண்னையும் சந்தித்தேன் 2018-ல்! என் விருப்பத்தையும் அவளிடம் கூறினேன். பதில் எதுவும் வரவில்லை! 2019-ல் பதில் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன்.

டிசம்பர் மாதம் எனது பிறந்தநாள் சென்றது. 30-வது வயது நிறைவு பெற்றது இந்த பிறந்தநாளில் தான். வாழ்வின் குறிக்கோளை நோக்கி பயணிக்க இது ஒரு அளவுகோல் வருடமாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும்.

பல காரணங்களால் அடுத்த வருடம் மிக முக்கியமான ஒரு வருடமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கும் அப்படியே அமைய வாழ்த்துக்கள்

30-வது பிறந்தநாள் அன்று, சென்னை

அன்புடன்,
ஜெகன்

வெள்ளி, 25 மே, 2018

தூத்துக்குடி படுகொலை – அதிமுக அரசின் தோல்வி!

         
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய பதில்களில் இருந்து எழும் கேள்விகள் :

1)   துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியது யார்?

2)   தற்காப்புக்காகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றால்,


i) 17 வயது சிறுமி முழக்கம் எழுப்பியது அரசை தாக்கியதால் தான் அவள் வாயில் சுட்டுக் கொல்லப்பட்டாளா?
ii) 74 வயது பாதிரியார் எந்த ஆயுதத்தை ஏந்தி தாக்கினார் அவரை இடுப்பில் சுட்டு தள்ள?
iii) தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திரேஸ்புரம் என்ற மீனவ கிராமத்திற்குள் நுழைந்த காவல்துறை, தன் குழந்தைகளுக்கு மீன் வாங்கி ஆட்டோவில் வந்திறங்கிய ஜான்சி ராணி என்ற பெண்ணை அவர் தலையில் சுட்டு மண்டையும் கண்ணும் சிதறி இருக்கிறது. அந்த தாயிடமிருந்து காவலர்களுக்கும் ஆட்சியருக்கும் அரசுக்கும் என்ன பாதுகாப்பு தேவைப்பட்டது? இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின் துண்டிப்பு செய்து திரேஸ்புரத்திற்குள் நுழைந்து இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றி இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு காவல்துறை.

3)   போராடிய மக்களை பதினான்கு முறை தூத்துக்குடி ஆட்சியர் சந்தித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே.. நீங்களோ அல்லது துணை முதலமைச்சரோ 99 நாட்களாக ஏன் அந்த மக்களை சந்திக்க செல்லவில்லை? ஓட்டுக்கு மட்டும் தான் மக்களா?

4)   தற்போதும் தூத்துக்குடி செல்லாமல் இருக்க அங்கு 144 தடை இருப்பதாகவும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் பேசும் நீங்கள், உங்கள் காவல்துறை சட்டத்தை மீறியதை ஏன் ஆதரிக்கிறீர்கள்? தூத்துக்குடி ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பணி இடம் மாற்றினால் இறந்தவர்கள் உயிர் திரும்ப வந்துவிடுமா?

5)   தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு பத்து லட்சம் ரூபாய் என்று விலை அறிவிக்கும் நீங்கள் ஏன் 2000 காவலர்களுடன் ஊட்டியில் மலர் விழாவை திறந்து வைத்தீர்கள்? பத்து லட்ச ரூபாய் கொடுத்தால் உங்கள் உயிரை நீங்கள் கொடுப்பீர்களா?

தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்ற போது மக்களுக்கும் காவல்துறைக்கும் ”தள்ளுமுள்ளு ஏற்பட்டது”, ”தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்று ஊடகங்கள் மூலம் ஒரு பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பேரணியில் மாடுகளை அவிழ்த்துவிட்டு மக்களிடையே ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது யார்? காவல்துறை தான் என்று அங்கிருந்த மக்களிடமிருந்து தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ் இயங்கும் துறை தான் காவல்துறை. மாட்டை அவிழ்த்து விடுவதும் அமைதியான சூழலை ஆசாதாரணமாக மாற்றியதும் தான் பாதுகாப்பா?

அதை தொடர்ந்தே மக்கள் சிதறி ஓடுகிறார்கள். பிறகு கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிச் சூடு, படுகொலை என அனைத்தையும் முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறை செய்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு கொடூரமான அரச பயங்கரவாதமும், வன்முறையும் தங்கள் மீது தொடுக்கப்படும் பொழுது மக்கள் தங்கள் உயிர்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்? மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை இது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முழு பொறுப்பு தமிழக அதிமுக அரசு தான். தமிழ்நாட்டை ஒரு தோல்வியுற்ற நிலைக்கு(Failed State) கொண்டு செல்லும் இந்த அரசு இனியும் நீடித்தால் தமிழகத்தை அழிவிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழகமெங்கும் பல முக்கிய வாழ்வாதார போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம். அதை நசுக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கம் எப்படி மக்கள் நலன்களை பேணிப் பாதுகாக்கும் ஒரு அரசாக இருக்க முடியும்? தன் மக்களையே ரத்த வெறி கொண்டு கொலை செய்யும் அரசின் ஆட்சி எப்படி மக்களுக்கான ஆட்சியாக இருக்க முடியும்?

இத்தனை தோல்விகளுக்கும், கொலைகளுக்கும் காரணமான அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

அன்புடன்,
ஜெகன்

வெள்ளி, 23 மார்ச், 2018

இந்துத்துவ யாத்திரை!


தமிழ்நாட்டை விட்டு இன்று வெளியேறிய ’ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ ஏன் தமிழ் நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது

இந்த ரத யாத்திரையின் நோக்கம் தான் என்ன? அதன் கோரிக்கைகள் என்னென்ன?

1)
உ.பி. மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும்.

2)
ராம ராஜ்ஜியம் அமைத்திட வேண்டும்(?!?).

3)
பள்ளி, கல்லூரி பாட திட்டத்தில் இராமாயணத்தை இடம் பெற செய்ய வேண்டும்.

4) '
உலக இந்து நாள்' அறிவிக்க வேண்டும்.

5)
ஞாயிற்றுகிழமை வார விடுமுறை என்பதை மாற்றி வியாழக்கிழமையாக கொண்டு வர வேண்டும்.

இதன் அறிவிப்பு குஜராத், மத்திய பிரதேச தேர்தலுக்கு முன் அறிவிக்க பட்டது. இந்த ரத யாத்திரை என்பது பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதி நீதிமன்ற விசாரணையின் தருணத்தில் நடத்தப்படுகின்றது.

இந்த ரதம் அதன் கோரிக்கைகளோடு மக்களின் கையெழுத்துகளையும் பெற்று ஆதரவு திரட்டுகிறது.

(
நண்பரிடம் கிடைத்த இன்னொரு தகவல் - இந்த ரதம் என்பது அதன் கோரிக்கைகளோடு அடுத்த 14 மாதங்கள்(14 வருட வனவாசம் போல) கேரளத்தில் காத்திருக்குமாம்! அப்படி நிறைவேற்றாமல் போனால் மீண்டும் பெரிய ஆளவில் இன்னொரு பிரச்சாரம் நடத்தப்படுமாம்.) இந்த தகவலின் படி பார்த்தால் மார்ச் 2018-ல் நிறுத்தப்படும் இந்த ரதம் என்பது ஏப்ரல் 2019 வரை காத்திருக்கும். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரம். மற்ற எல்லா பிரச்சினைகளையும் மழுங்கடிக்க வைத்து ராமர் கோவில் விவகாரத்தை மையப்படுத்தி வாக்கு சேகரிப்பது இவர்களின் நோக்கம்.

எனக்கு எழும் சில சந்தேகங்கள்..
இப்போது ராமன் கோவில் கட்டி என்ன மாற்றம் வரப்போகிறது?! நாட்டின் பிரச்சினைகளை எல்லாம் ராமர் வந்து தீர்த்து வைக்க போகிறாரா
இராமாயணத்தை பாட திட்டத்தில் சொல்லிக் கொடுத்துவிட்டு ராணுவத்தில் வில்லும்-அம்பும் பயன்படுத்த போகிறீர்களா?
இந்திய அரசியல் சாசனம் என்பது மதச்சார்பின்மையானது. அதில் ஏன் உலக இந்து தினம் வேண்டும்?
வியாழன் விடுமுறை என்றால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு உறுதியாகிவிடுமா?

1990-
ல் அத்வானியால் நடத்தப்பட்ட இதே ரத யாத்திரையால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பல மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக இஸ்லாமியர்கள்.
அன்று தமிழ்நாட்டில் கலவரங்கள் பெரிதாக நிகழவில்லை. காரணம் இங்கு மத நல்லிணக்கம் இருக்கிறது. இந்த சூழலை மாற்றிடவும் பார்ப்பனியத்தை நம் மீது திணித்திடவும் பல்வேறு வேலைகளில் பா.ஜ.க இறங்கி இருக்கிறது. அதில் இந்த ரத யாத்திரையும் ஒன்று.

இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் படித்த பலரும் இதற்கு பகடைகாயாக மாறுவது தான் அவலம்.

இந்தியாவை இந்துத்துவாவாக மாற்றுவது ஒன்றே இதன் நோக்கம். இது மதச்சார்பின்மையை முற்றிலும் சீர்குலைக்கும். 2014 மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை எத்தனை கொலைவெறி தாக்குதல்கள் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.  நன்றி : புதிய தலைமுறை.

இவர்கள் சொல்லும் ராம ராஜ்ஜியம் (இந்து ராஜ்ஜியம்) வந்தால் இத்தகைய கொலைகள் அதிகார பூர்வமாகவே அரங்கேறும்! அதை நடத்த விட மாட்டோம் என்ற எச்சரிக்கையே தமிழர்களின் எதிர்ப்பு.

அன்புடன்
ஜெகன்.

வருகின்றது ஒரு ரத யாத்திரை..!


வியாழன், 1 பிப்ரவரி, 2018

பறையிசை


2008 ஆம் ஆண்டு உலக போதை ஒழிப்பு தினமான சூன் 26-ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்காக விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றைபரீக்ஷாநாடக குழு சார்பாக அரங்கேற்றினோம். அதுவே பரீக்ஷா குழுவில் எனது முதல் நாடகம்.

எங்கள் வீதி நாடக துவக்கமே பறையிசையில் தான் ஆரம்பமானது. கட்டியக்காரன் பறையிசையை வாசித்துக் கொண்டே நடனமாடிய படி வருவார். அவரை பின் தொடர்ந்து வீதி நாடகம்/தெருக் கூத்து கலைஞர்களும் நடனமாடிய படியே வந்து நாடகத்தை துவங்குவோம். எங்கள் நாடகத்திற்கு இசை என்பது பறையிசை தான். நிகழ்வை அவ்வளவு உற்சாகமூட்டும் விதமாக வைத்துக் கொள்ளும் அதன் இசை.

சிறு வயதில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பறையிசையை கேட்டிருந்தாலும் கூட அந்த இசையோடு பயணிக்க ஆரம்பித்தது என்னவோ அந்த வீதி நாடகத்தில் இருந்து தான்.

பரீக்ஷா நாடகக் குழுவில் நான் நடித்த பெரும்பாலான நாடகங்கள் வீதி நாடகங்கள் தான். அதற்கு பிண்ணனி இசை இந்த பறையிசை தான். அப்போதிலிருந்தே பறையிசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான சில வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.

சமீபத்தில் முகநூல் வாயிலாகமையம் கலைக்குழுநடத்தும் பறையாட்ட பயிற்சி பட்டறை நிகழ்வு குறித்து தெரிய வந்தது. சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி. இரண்டு நாட்களுக்கான பயிற்சி கட்டணம் 750 ரூபாய். இதில் அடிப்படை பறையிசை மற்றும் நடனம் கற்றுத் தரப்படும் என்பதால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணிணேன். பங்கேற்றேன். நன்றி, முகநூல்!

பறையிசை பயிற்சி பட்டறை நடைபெற்றது சென்னை சாந்தோம்-இல் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் தான். பட்டினப்பாக்கத்தில் இருந்து சாந்தோம் வர எனக்கு பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டது!!

பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக படிமத்தில் பங்கேற்பாளர்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்புகள் பெறப்பட்டது. அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஏன் இந்த பறையாட்ட பயிற்சியில் கலந்து கொள்கிறோம் என்பதையும் கூறினோம். மையம் கலைக்குழு சார்பாக பறையிசை குறித்த ஒரு அறிமுகத்தோடு பயிற்சி துவங்கியது.

பறை என்ற இசைக் கருவி மாட்டின் தோளால் செய்யப்படும் ஒரு கருவி. ஓர் அடி சுற்றளவு கொண்டது. பறை இசைக்க இரண்டு மரத்தாலான குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று, மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட சுண்டு குச்சி. மற்றொன்று வேப்பம் மரத்தால் செய்யப்பட்ட அடி குச்சி. இந்த இரண்டு குச்சிகளில் இருந்த வரும் ஓசைகள் இரண்டு தாளங்களாக வாசிக்கப்படுகிறது. அதுவே பறையின் அடிப்படை தாளங்கள்.

இந்த தாளங்களின் பல்வேறு அடிகள் மூலமாக பறையிசை வாசிக்கப்படுகிறது. இந்த அடிகளை மிகவும் எளிமையான வாய்ப்பாடுகள் மூலமாக மையம் கலைக் குழுவின் கோகுல கிருட்டிணன் என்பவர் பயிற்றுவித்தார். இந்த வாய்ப்பாடுகள் கற்றுக் கொள்பவர்களின் மனதில் சுலபமாக பதிவேறும் வகையில் பயில்பவர்கள் தரையில் அமர்ந்து கொண்டு தங்கள் கைகளால் கால்களில் இசைத்தபடி இந்த தாளங்களை மனப்பாடம் செய்து கொண்டோம். அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயிற்சிக்காக வழங்கப்பட்ட பறையில் இந்த அடிகளை இசைத்து பழகினோம்.

பறையாட்டத்தின் சிறப்பு அம்சம் என்பதே அதை ஆடிக் கொண்டே இசைப்பது தான்! ஆக அடுத்ததாக முதலில் கற்றுக் கொண்ட அடிகளுக்கான அடவு(நடனம்) பயிற்றுவிக்கப்பட்டது. இது உடல் சார்ந்த பயிற்சி. பிறகு, கைகளில் பறையை வாசித்துக் கொண்டே அதற்கு ஒன்று சேர நடனமும் ஆட வேண்டும். பறையாட்டத்தின் மிக கடினமான விடயம் இது தான். அதோடு பறையாட்டம் எப்போதும் ஒரு குழுவாக அரங்கேற்றப்படும் ஒரு நிகழ்வு. அதனால் பறையை இசைப்பதாகட்டும் அதற்கு நடனமாடுவதாகட்டும் இரண்டையும் குழுவோடு ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். இதற்கு செறிவு  மற்றும் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

இரண்டு நாட்களும் பறையிசையின் அடிப்படை அடிகள்/தாளங்கள், அதன் வாய்ப்பாடுகள், அதை பறையில் பயில்வது, அதற்கான அடவு பயில்வது, பிறகு அதை இணைந்து பறையாட்டம் செய்வது என சென்றது. இறுதியாக குழுவாக அரங்கேற்றம் நடத்தினோம். பறை இசை என்பதை உள்வாங்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாக இருந்தது.

இதற்கு முன்பாகவும் பறையை வாசித்த அனுபவம் எனக்கு இருந்தது. பரீக்ஷா குழுவின்முனியன்நாடகத்தை 2009-ல் டி.பி.ஜெயின் கல்லூரியில் அரங்கேற்றிய போதும் பிறகு அதே நாடகத்தை திருச்சியில் அரங்கேற்றிய போதும் பிண்ணனி இசையாக பறையை வாசித்திருக்கிறேன். அது முற்றிலும் தாளங்களால் மட்டும் இசைத்த அனுபவம். தற்போதைய பயிற்சி என்பது முழுமையாக வேறோரு அனுபவம்.

இன்று நாம் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள தொலைபேசி, சுடரொளி கொண்ட கைபேசி என தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்டோம். ஆதி தமிழர் பறையிசையை தான் தம் சமூகத்தின் தொலைதொடர்பு கருவியாக பயன்படுத்தியுள்ளனர். ஊர் மக்களுக்கு ஒரு தகவலை தெரிய படுத்த பறையிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்களுக்கு பல்வேறு அடிகள் வாசிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஊருக்குள் வெள்ளம் வருகிறது என்றால் ஒரு விதமான அடி வாசித்து மக்களை விழிப்படைய செய்திருக்கின்றனர். இன்னும் ஆழமாக சென்று பார்த்தால், பறை என்பதை மனிதன் காடுகளில் வாழும் காலங்களில் இருளிடம் இருந்த பயத்தை போக்குவதற்கும் விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ளவும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான்.

திருமண நிகழ்வுகளில் பறையிசை வாசிக்கப்பட்டிருக்கிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளமாக பறை இருந்து வருகிறது. தமிழ் இலக்கியங்களில் அகநானூறு, மணிமேகலை, குறுந்தொகை என பல இடங்களில் பறை குறித்து பாடப் பட்டிருக்கிறது. பறை என்பது மக்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்கும் ஒரு கருவி.

இன்றைக்கு நம் தொடர்பு சாதனங்கள் பல்வேறு வடிவங்களை பெற்று விட்ட நிலையில் பறையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால் பறையிசை என்பது கலை நிகழ்வுகளில், பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பயன்பாட்டில் உள்ளது. இன்று பல்வேறு சினிமா பாடல்களை நாம் கேட்டு ரசித்தாலும் கூட நம்மை எழுந்து ஆட வைக்கும், புத்துணர்வு தரும் பாடல்களில் பறையிசை இருப்பதை காணமுடிகிறது. அதுநாக்க முக்காபாடலாக இருந்தாலும் சரி, ‘ஆளபோறான் தமிழன்பாடலாக இருந்தாலும் சரி.

இறுதிச்சடங்குகளில் பறை வாசிக்கப்படுவது நாம் அறிந்த ஒன்று தான். வாசிப்பதற்கான காரணம் தான் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. பறை ஓசையை கேட்டும் ஒருவர் எழவில்லை என்றால் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்துவதற்காகவாம்! அந்தளவிற்கு இந்த கருவியும் அதன் இசையும் நம் வாழ்வோடு இணைந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

திருமணங்களில் வாசிக்கப்பட்டதாக சொல்லப்படும் பறையிசை இன்று ஜாதிய சாயம் பூசப்பட்டு ஒடுக்குமுறைக்கு தள்ளப்பட்டுவிட்டது! இசையையும் விட்டு வைக்கவில்லை இந்த ஜாதி கொடுமை. தொழில்முறை பறை கலைஞர்களே இந்த கருவியின் மீது சுமத்த பட்டிருக்கும் ஜாதிய வன்மம் காரணமாக இதை கைவிட்டு செல்கிறார்கள். உலகில் வேறெங்கும் இது நடக்குமா என்று தெரியவில்லை.

பறையிசை என்பது தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அதை பரவலாக்குவதும் அதன்மீதிருக்கும் ஒடுக்குமுறையை உடைத்தெறிவதும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நமது கடமை. அத்தகைய முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் மையம் கலைக்குழுவில் எவரும் தொழில்முறை கலைஞர்கள் அல்ல! வெவ்வேறு துறைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் மாணவர்கள். அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்,

ஜெகன்.

புதன், 17 ஜனவரி, 2018

அன்புள்ள ஞாநிக்கு

                                                   

பத்திரிக்கையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், ஆவணப் படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஞாநியின் ஆளுமைக்கு அவரது மறைவின் போது அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழகத்தின் மிக முக்கிய நபர்களின் வருகையே ஒரு சான்று. அத்தகைய ஒருவர் மிகவும் எளிமையாகவே தன்னை எப்போதும் வைத்துக் கொள்பவர். அப்படியான அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது 2007-ஆம் வருடம் அவரது நாடக குழுவான பரீக்‌ஷாவில் பணியாற்ற சென்ற போது தான்.

அவர் தனது வாழ்வில் கடைபிடித்த கொள்கைகளில் முக்கியமாக அவர் தன் நண்பர்களிடம் சொல்லுவதென்பது, நாம் நம் வாழ்வில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை தான். நாம் எங்கு பிறக்கும் யாராக பிறக்கிறோம் என்பதை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் நாம் யாராக வாழ்கிறோம் என்பதையும் நம் அறநெறிகளையும் நாம் தான் தெர்ந்தெடுக்கிறோம் என்று சொல்வார்.

ஒரு நாடக ஆசிரியராக, கலைஞராக அவர் சொல்வது, கலையின் வேலை என்பது மனிதனை சிந்திக்க தூண்ட வேண்டும் அவனை தொந்தரவு செய்ய வேண்டும். அத்தகைய படைப்புகளே அவரது நாடகங்கள். அதில் சில காலம் நடித்த அனுபவம் என்பது மறக்க முடியாத பல விஷயங்களை கற்பித்தது. அவர் தமிழ் உருவாக்கம் கொடுத்த பாதல் சர்க்காரின் ’முனியன்’ நாடகம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் அரசியல், விவசாயம், சுற்றுசூழல் என பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். அவரும் அதில் நடித்திருப்பார். அதே போல் ’தேடுங்கள்’ என்ற நாடகத்தில் அவருடன் நடித்த அனுபவம் என்றும் என் நினைவில் இருக்கும்.

பத்திரிக்கை துறை, எழுத்து, அரசியல் விமர்சனம் மற்றும் சமூக செயல்பாட்டாளர் என பல்வேறு வேலைகளில் தொடர்ந்து இயங்கி வந்த அவருக்கு நாடகம் – பரீக்‌ஷா என்பது புத்துணர்ச்சியளிக்க கூடிய ஓர் இடம். தொடர்ந்து இளைஞர்களை வைத்து நாடக ஒத்திகைகள் செய்வது, நாடக பயிற்சிகள் நடத்துவது, நாடகங்களை மேடையேற்றுவது என அது அவரது வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகவே இருந்தது. அவர் திருமணம் கூட நாடக மேடையில் தான் நிகழ்ந்தது என்பதை அவர் சொல்வதுண்டு. பரீக்‌ஷா நாடக குழுவின் நண்பர்கள் அவருக்கு ஒரு குடும்பம் போலவே இருந்தார்கள்.

அனைவரிடமும் அன்பு கொண்ட அவரது வீடு எப்போதும் ஒரு திறந்த வீடு. நண்பர்கள், தேவை இருப்பவர்கள் அங்கு தங்கவும் அனுமதி அளித்தார்.  

அவரிடம் நான் மிகவும் ரசித்த விஷயங்கள் அவரது எழுத்துக்கள், அவரின் வரலாற்று அறிவு, அவரது நடிப்பு. வியந்தவை, எந்த விஷயத்திலும் அவரது அறிவு சார்ந்த தனித்துவமான பார்வை.

எனது வாழ்வில் கிடைத்த சிறந்த விஷயங்களில் அவரது நட்பும் ஒன்று. குறுகிய பார்வையிலிருந்து சமூக பார்வைக்கு என்னை விசாலமடைய செய்தவர் அவர். அது ஒரே நாளில் நின்று போவது இல்லை. வாழ்க்கை முழுவதும் என்னுடன் பயணிக்க கூடிய ஒன்று.

மரணம் என்பது எவரும் விரும்பாத ஒன்று. நீண்ட நாட்கள் வாழ தான் அனைவரும் ஆசை படுவர். ஞாநி ஒரு முறை பேசும் போது கூறியது, ‘நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால் இன்னும் எத்தனை பிரச்னைகளுக்காக, சமூக நலனுக்காக என்னால் உழைக்க முடியும்’ என்றார். அவர் தனது வாழ்க்கையின் கொள்கைகளையும் வாழ்க்கையையுமே சமூக நலனுக்காக வாழ விரும்பியவர். அவர் இறக்கும் சில மணி நேரம் முன்பு வரை ஓயாமல் அதை செய்து கொண்டும் இருந்தவர்.

நாடகம், இலக்கியம், அரசியல் ஆய்வுகள், சமூக செயல்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கிய ஞாநி இன்று தனது படைப்புகளாலும் என்னை போன்ற பலரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களாலும் இயங்கி கொண்டு தான் இருப்பார்.

பல்வேறு மக்களை இணைக்கும் ஒரு மையமாக இயங்கியவர் ஞாநி. அந்த இணைக்கும் புள்ளியை இன்று இழந்துவிட்டோம் என்பது பெரும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர் விட்டு சென்ற பணிகளை அவர் அமைத்து கொடுத்த தளங்களில் தொடர்வது தான் என்று கருதுகிறேன்.

எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் எழுத்துக்களால் மரியாதை செலுத்துகிறேன்.

அன்புடன்,

ஜெகன்.