ஒவ்வொரு வருடம் முடிவுரும் போதும் நாம் அந்த ஆண்டு நம் வாழ்வில்
நிகழ்ந்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு தருணம் ஒன்று அமைந்து விடுகிறது. அவ்வாறு
2018 ஆம் ஆண்டில் என் வாழ்வில் நான் கடந்து வந்த சில சம்பவங்களை, நிகழ்ந்த
நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு பதிவே இக்கட்டுரை.
2018 எனக்கு எப்படி இருந்தது என்பதை விட தமிழ்நாட்டுக்கு எப்படி
இருந்தது என்று பார்த்தால் நானும் அதற்குள் அடங்கிவிடுவேன் என்று நினைக்கிறேன். ஏன் என்பது
கட்டுரைக்குள் செல்லும் போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
2018 ஆரம்பமானது எனக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தான். ஒரு திரைப்படத்தில் துணை இயக்குனராக வேலை செய்ய ஒரு திரைப்பட இயக்குனரை சந்திக்க சென்றிருந்தேன். அது ஒரு ஏமாற்று கும்பல் என்பது அவர்களை சந்தித்து சென்னைக்கு திரும்பிய வரை எனக்கு தெரியாது! இத்தனை நாட்களில் படப்பிடிப்பு துவங்குகிறது என்றும், நீங்கள் அந்த தேதியில் வந்து விடுங்கள் என்றும் கூறினார்கள். சரி என்றேன். ஒரு 2800 ரூபாயை முன் பணமாக செலுத்த வேண்டும் என்றார்கள். காரணம் கேட்டதற்கு நிறைய பேர் இங்கு வேலை செய்ய வருவதாக கூறிவிட்டு பாதியிலேயே சென்று விடுகிறார்கள். அதை தவிர்க்க இது ஒரு டெப்பாசிட் பணம் பெறும் முறை என்று சொன்னார் அந்த சினிமா இயக்குனர். சரி என்று இருந்த காசை எல்லாம் சேர்த்து 2800 ரூபாய் கொடுத்துவிட்டு சென்னைக்கு வந்தேன். அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு தான் தெரிந்தவர்கள் சொன்னார்கள் அவர்கள் இதற்கு முன்பும் இது போல பலரிடம் பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் என்று! ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது இந்த ஆண்டு.
![]() |
| திருநெல்வேலிக்கு செல்லும் முன், கோயம்பேடு பேருந்து நிலையம், 31-12-2017 மாலை |
ஆனால் போகப் போக பொது வாழ்வில் நல்ல பல அனுபவங்களை தந்தது எனக்கு
2018 தான் என்று சொல்ல வேண்டும்.
ஜனவரி மாதம் பொங்கல் அன்று இரவு மிக துயரமான அதிர்ச்சி அளிக்கும்
அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. எழுத்தாளர் ஞாநி இறந்துவிட்டார் என்ற செய்தியை அழுதபடி என்
சகோதரி எனக்கு இரவு 2.00 மணியளவில் சொன்னார். உடனே கிளம்பி
அவர் வீட்டிற்கு சென்றுவிட்டோம். பலருக்கும் ஒரு தூணாகவும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய நபராகவும்
இருந்த அவரது மறைவு 2018-ல் ஈடு செய்ய முடியாது ஒரு இழப்பு என்று தான் சொல்வேன்.
ஜனவரி மாதம் கடைசி வார இறுதியில் சென்னையில் மையம் கலைக்குழு நடத்திய
இரண்டு நாள் பறையாட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டதில் எனது நீண்ட நாள் பறை வாசிக்க வேண்டும்
என்ற விருப்பம் நிறைவேறியது. ஒரு பறையிசை கலைஞனாகவும் ஆனேன். பறையிசை
பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. சொந்தமாக
ஒரு பறையும் வாங்கிவிட்டேன். பிறகு பறையிசை குறித்த எனது வலைப்பதிவையும் பதிவேற்றினேன்.
![]() |
| பறையாட்ட பயிற்சி முகாமில் |
மே17 இயக்கத்தில் தன்னார்வலராக செயலாற்றி வந்த தருணம் அப்போது. தோழர்கள்
ஒரு சந்திப்பின் போது அடுத்த சில வாரங்களில் ‘வெல்லும்
தமிழீழம்’ மாநாடு சென்னையில் இருக்கிறது என்றார்கள். மிக குறுகிய
காலத்தில் ஒரு மாநாடு என்பதால் களப்பணிகளில் தோழர்களோடு இணைந்து வேலை செய்த மனநிறைவை
தந்தது அந்த மாநாடு.
மாநாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேலையிலேயே காவேரி
நதி நீர் இறுதி தீர்ப்பு வெளி வந்தது. ஆக மாநாடு முடிந்த
அடுத்த சில தினங்களிலேயே காவேரி உரிமை மீட்பு பொதுக்கூட்டங்கள், அதற்கான
களப்பணி, பெரியார் சிலை உடைப்பு பிரச்சினை என நிறைய அரசியல் சார்ந்த
போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினேன். குறிப்பாக காவேரி
நதி நீர் பிரச்சினை தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்பதால் அதன் அனைத்து போராட்டங்களிலும்
கலந்து கொண்டேன்.
குறிப்பாக சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம், பெரியார்
சிலை உடைப்புக்கு எதிர்வினையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு, மோடிக்கு
கருப்பு கோடி போராட்டம், ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டம் என ஏப்ரல் மாதம் மட்டும் தமிழர்
உரிமைக்காக பல முறை கைதாகி விடுதலையான அனுபவங்கள் நிகழ்ந்தது.
![]() |
| காவேரி உரிமை மீட்பு சுவரொட்டி |
காவேரி நதி நீர் பிரச்சினை தீர்வதற்குள் ஸ்டெர்லைட் துப்பாக்கி
சூடு சம்பவம் ஒரு முக்கிய பிரச்சினையாகி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல போராட்டங்களில்
ஈடுபட்டு வந்த எனக்கு போராட்டம் செய்தவர்களை சுட்டுக் கொன்றது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு
முன்பு வரை ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவுகளையும்
பிரச்சாரங்களையும் செய்து வந்த நான் ஸ்டெர்லைட் பிரச்சினையை ஆவணம் செய்ய வேண்டும் என
எண்ணினேன். துப்பாக்கிச்சூடு நடந்த சில தினங்களில் தூத்துக்குடிக்கு
கேமரா எடுத்துக் கொண்டு சென்றுவிட்டேன். தூத்துக்குடியின்
கள நிலவரம் என்ன என்பதையும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கான மக்களின் நீண்ட நாள் போராட்ட
வரலாற்றையும் ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முடிந்தது.
ஆவணப்படம் தயாரிக்கும் பணிகளில் தற்போது இருக்கிறேன். நிதி சிக்கல்
காரணமாக தயாரிப்பு வேலைகள் தற்சமயம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
![]() |
| ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு, தூத்துக்குடி |
தூத்துக்குடிக்கு சென்று வந்த பிறகு தொடர்ந்து பல களப் பணிகளில்
இருந்ததால் ஒரு மாறுதல் தேவை பட்டது. ஒரு மாத காலம் நகரம், வேலை என
இல்லாமல் என்னை உணர்ந்து கொள்ள தனிமையும் இயற்கை சூழலும் தேவைப்பட்டது. தோழர் ஒருவர்
மூலமாக திருவண்ணாமலை அருகே குக்கூ காட்டுப் பள்ளி என ஒரு இடம் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று
சில நாட்கள் இருந்தேன். இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு சூழல். புளியானூர்
என்ற அழகான கிராமத்தில் அமைந்திருக்கிறது அந்த பள்ளி. வாழ்க்கையில்
ஒவ்வொருவரும் அப்படியான ஒரு சூழலில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி
பெட்டி அங்கு கிடையாது. ஜவ்வாது மலையடிவாரம், அந்த பக்கம்
காடு, காட்டுப் பள்ளி வளாகத்தில் நாற்றங்கால்(nursery)
பணிகள், ஜென் தோட்டம், வாழ்வின் பல நிலை
மனிதர்கள் என ஒரு சிறந்த அனுபவமாக அந்த பயணம் அமைந்தது.
![]() |
| புளியானூர் கிராம குழந்தைகள் |
![]() |
| ஜவ்வாது மலைக் காடு, குக்கூ காட்டுப்பள்ளி அருகில் |
அங்கிருந்து வந்த பிறகு நாம் இவ்வளவு காலமாக எப்படியான ஒரு
சிக்கல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர முடிந்தது. பயணங்கள்
செய்ய ஆரம்பித்தேன். சிக்மகளூர், மேட்டூர், ஒக்கேனக்கல்
என பயணம் தொடந்தது. கேரளா பெரு வெள்ளத்திற்காக தன்னார்வ தொண்டு செய்ய சில நாட்கள்
கேரளா சென்றேன்.
இயற்கையின் கரங்கள் நமக்காக எவ்வளவு பறந்து விரிந்து கிடக்கிறது
என்பதை பயணம் செய்யும் போது உணர முடிகிறது. குறிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் காவேரி
நதி நீருக்காக சாலை மறியல், முற்றுகை போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என பாடு பட்டதற்கு
பலனாக மேட்டூர் அணையில் நீர் நிறம்பியதை காணும் போதும், காவேரி நதியில் குளித்த போதும்
மனம் அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது. இயற்கையை ஒன்றிய வாழ்வே உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு
என்பதை உணர முடிந்தது பல தருணங்களில்.
| Hirekolale Lake, Chikmagalur(சிக்மகளூர்) |
![]() |
| ஓனம் பண்டிகை வரவேற்பு - கோழிக்கோடு பேருந்து நிலையம், கேரளா |
![]() |
| ஹொக்கேனக்கல் அருவி - தருமபுரி, தமிழ்நாடு |
கேரளாவில் இருந்து வந்த பிறகு சொந்தமாக தொழில் செய்ய எண்ணி
ஒரு கார் வாங்கினேன். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்ததால் அந்த கார்-ஐ திரும்ப
கொடுத்து விட்டேன்.
இழப்புகள், பொதுவாழ்வு, களப்பணி, வாழ்வை
மாற்றக்கூடிய அனுபவங்கள், இயற்கை சூழல், பயணம் என இப்படியாக
சில அனுபங்கள் இந்த வருடம் அமைந்தது எனக்கு.
தேவதை போன்ற ஒரு பெண்னையும் சந்தித்தேன்
2018-ல்! என் விருப்பத்தையும் அவளிடம் கூறினேன். பதில் எதுவும்
வரவில்லை! 2019-ல் பதில் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன்.
டிசம்பர் மாதம் எனது பிறந்தநாள் சென்றது.
30-வது வயது நிறைவு பெற்றது இந்த பிறந்தநாளில் தான். வாழ்வின்
குறிக்கோளை நோக்கி பயணிக்க இது ஒரு அளவுகோல் வருடமாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும்.
பல காரணங்களால் அடுத்த வருடம் மிக முக்கியமான ஒரு வருடமாக
இருக்கும் என்று தோன்றுகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கும்
அப்படியே அமைய வாழ்த்துக்கள்.
![]() |
| 30-வது பிறந்தநாள் அன்று, சென்னை |
அன்புடன்,
ஜெகன்.









