வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்?

‘பார்ப்பனியம்’ என்றால் என்ன என்பதற்கு முதலில் விளக்கம் கொடுத்துவிட்டு மேலும் பேசுவது சரியாக இருக்கும்.


பார்ப்பனியம் என்பது பார்ப்பன சமூகத்தினரை குறிப்பதல்ல. பார்ப்பனிய சித்தாந்தத்தை கடைபிடிப்பதை பார்ப்பனியம் என்று சொல்கிறோம். பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்த நண்பர்கள், ஆசான்கள் என அன்பான பலர் எனக்கு இருக்கின்றனர். அவர்கள் அந்த சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இல்லை. அதை பின்பற்றுபவர் எவரும் எனக்கு நண்பரும் இல்லை.

'
நான் பிறப்பாலும் அந்தஸ்தாலும் உயர்ந்தவன். என்னைவிட தாழ்ந்தவன் இன்னொருவன் இருக்கிறான்' என்ற சிந்தனையே பார்ப்பனியம். உலகில் அனைவரும் சமமானவர்களே. பிறப்பாலும் செய்யும் தொழிலாலும் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது.  ஆனால் நாம் அனைவரும் அப்படி சிந்திக்கிறோமா?

ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மட்டுமே முக்கியமானவர்களா என்றால் கிடையாது. அந்த பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கும் பணியாளும், உணவு தயாரிக்கும் அம்மாவும், துப்புறவு செய்யும் தொழிலாளியும் அதே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தான். இதில் எல்லோருடைய பங்களிப்பும் சேர்ந்தால் தான் அந்த பள்ளி இயங்க முடியும்.

இந்த சமத்துவம் ஏன் இருப்பதில்லை?

பிறப்பால் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை நம் சமூகத்தில் உருவாக்கியது எது என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் ஆராயாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது ஜாதி அடிப்படையில் உருவானது. ஜாதி, மதம் என்ற போர்வைக்குள் இருந்து வருகிறது. மதம், கடவுள் என்ற ஒன்றிலிருந்து வருகிறது. கடவுள் என்பது இருப்பதற்கான எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் கிடையாது.

ஆக, கடவுள் என்ற ஒன்றை நிரூபிக்காத வரையில், மதம் என்பதும் ஜாதி என்பதும் ஏற்றத்தாழ்வு என்பதும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவைகள் ஆகும்.

ஆனால், புராணங்களும் வேதங்களும் போதிப்பது என்ன?
கடவுளையும் விட உயர்ந்தவன் பிராமணன் என்ற பார்ப்பனன் என்பதாகும். கடவுளே நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது, அதைவிட உயர்ந்தவன் என்ற ஒன்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இன்றைய அறிவியல் உலகில் நாளுக்கு நாள் அனைத்தும் புதுப்பித்துக்கொண்டே(updating) இருக்கும் சூழலில், ஆயிரம் வருடங்கள் முன்பு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் சொல்லப்பட்ட புராணங்களின் கட்டுக்கதைகளை நம்புவதை விட ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது.

அதை நம்ப வைக்கவும், பின்பற்ற வைக்கவும் வரலாறு முழுவதும் ஒரு தொடர்ச்சியான வேலை நடந்து கொண்டே இருக்கிறது, ஆன்மீகம் என்ற பெயரில்!

இந்த காலாவதியான வேதங்களும், புராணங்களும் மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை சட்டங்கள் படி, "அனைத்து நபர்கள், நிறுவனங்கள், தனியார், பொதுவுடமை மற்றும் அரசுக்கும் நியாயமான மற்றும் சமமான சட்டங்களுக்கான பொறுப்பும், அதை பாதுகாப்பதற்கான எந்தவித பாகுபாடற்ற உரிமையும் உண்டு. இனம், பாலினம், மொழி அல்லது மதம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம உரிமைகளை அளித்து மதிக்க அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.”

பார்ப்பனிய ஜாதி அடுக்குகள் 

ரிக்வேதத்தின் மனு சாஸ்திரப்படி, மனிதர்களை நான்கு ஜாதிகளாக பிரிக்கின்றனர். பிரம்மணின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைஷியன், பாதத்தில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்பதாகும். இந்த நான்கு பிரிவுகளும் அவரவரின் தொழிலுக்காக பிரிக்கப்பட்டதாக ஒரு பொய்யான வாதம் முன் வைக்கப்படுகிறது.

இதன் மூலம் கல்வி கற்கும் உரிமை ஒரு பிரிவினரான பிராமணர்/பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கூட சம்ஸ்கிருத மொழி தெரிந்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை இங்கு இருந்தது, தற்போது நீட் தேர்வு இருப்பதை போல. இவை மற்றவர்களிடம் இருந்து கல்வி, உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பறிக்கவே செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்ச்சி சாஸ்திரங்களால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கல்வியை பெற்று உயர் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருப்பதை உறுதி செய்து வந்தது. மற்றவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இந்த ஏற்றத்தாழ்வை தகர்க்கவே, கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படும் மற்ற சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்ற முறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. இதனால், கல்வியும் வேலைவாய்ப்பும் இதுவரை மறுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டு முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

எந்த ஜாதி என்ற அடிப்படையில் இவை மறுக்கப்பட்டதோ, அதே ஜாதியின் அடிப்படையில் இன்று இவை வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மையை முற்றிலும் மறுத்துவிட்டு, இடஒதுக்கீடால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று எதிர்ப்பதை விட ஒரு அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.

இடஒதுக்கீடு தான் வந்துவிட்டதே, இனி ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் இருக்கப்போவதில்லை என்று நினைப்பது தவறு. ஜாதிகள் இருப்பதற்கு காரணமான மதங்களும் கடவுள்களும் இன்றும் இருக்க தானே செய்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு பலத்துடன் இந்துத்துவா மதவாத கட்சி தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ‘மதாச்சார்ப்பின்மை’, ‘சமதர்மம்’ என்ற வார்த்தைகளை அரசியலமைப்பு சட்ட முன்னுரையில் இருந்தே நீக்க வேண்டும் என்று வாதிடப்படுகின்றன.

ஆன்மீகம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களிலும் மதமும் கடவுளும் தொடர்ந்து பரப்பப்படுகிறது. இதன் மூலம் அதன் உறுப்பான ஜாதிய எண்ணம் சமூகத்தில் தொடர்வதை உறுதிபடுத்துகிறது. ஜாதி வெறி ஆணவக்கொலைகளும், அக்கிரமங்களும் தினம் தினம் இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டின் குடியரசு தலைவராகவே இருந்தாலும் அவரை கோயிலுக்குள் அனுமதிக்காத பாகுபாடுகள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், இந்த பார்ப்பனிய சித்தாந்தத்தை பின்பற்றுவதை நாம் கைவிட வேண்டும். அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். சமத்துவம் அடைவதற்கான சட்டங்களை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த ஒரு சித்தாந்தத்தை எதிர்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 

அன்புடன்,

ஜெகன்

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

இந்தியாவை அழிக்கும் மோடி அரசு?

பல தேசிய இனங்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியே தன் தேசத்தை அழிக்க நினைப்பாரா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அவரது அரசு தலைமையில் உள்ள அமைச்சகத்தின் செயல்பாடுகள் அவ்வாறே இருக்கிறது!

இன்று உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கும் கோவிட்-19 கொரோனா நோய்த்தொற்று பரவ முக்கிய காரணமாக சொல்லப்படுவது இயற்கை வளங்களான காடுகள் அழிக்கப்படுவது தான். கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. காடுகள் அழிக்கப்படுவதால், அங்கு வாழும் விலங்குகள் மனிதன் இருக்கும் இடத்தில் அவனுடன் சேர்ந்து வாழ்வதால், மனிதனுக்கு கொவிட்-19 போன்ற புதிய நோய்கள் பரவுகின்றன.

காலநிலை மாற்றம்(climate Change) மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற சூழலில் நம் காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. ஆனால், மோடி அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Draft Environment Impact Assessment 2020Draft EIA2020) தற்போது இந்திய ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ என்றால் என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ஒரு மிக மோசமான தொழில்துறை பேரழிவாக கருதப்பதும் ‘போபால் பேரழிவு’ நடைபெற்ற பின் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்தியாவில் உருவாக்கபட்டது. அதன் ஒரு அங்கமாக 1994-ல் கொண்டுவரப்பட்டது தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு. இதன் நோக்கம் சுரங்கம், உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, மனை விற்பனை மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து அவற்றை தடுப்பதும் குறைப்பதும் சீராக்குவதும் ஆகும்.

போபால் பேரழிவு 1984

போபால் பேரழிவில் இறந்த குழந்தை


கடைசியாக 2006-ல் திருத்தபட்ட இந்த சட்டத்தில், தற்போது பல மாற்றங்களை கொண்டுவருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஆம், காலத்திற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது அவசியம் தான். அது சுற்றுச்சூழலை மேன்மையடைய செய்யுமா அல்லது மோசமடைய செய்யுமா என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவில் கொண்டுவரப்பட உள்ள இந்த திருத்தங்கள், சுற்றுச்சூழலை மேலும் மோசமடைய செய்யும் என்பதே  சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

அதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு: 

1)      ‘POST FACTO’ ENVIRONMENTAL CLEARANCE – தொழில்துறை நிறுவனங்களை தொடங்கிய பின் அனுமதியை வாங்கிக்கொள்ளலாம் :

கேட்கவே நகைப்பாக இல்லையா? ஆம், இதை தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஆரம்பிக்கும் முன்பே சுற்றுச்சூழல் துறைகளிடம் விண்ணப்பித்து, அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை என்ற அனுமதியை பெற்ற பிறகே தொடங்க முடியும். ஆனால் அந்த நடைமுறையை தற்போது வர இருக்கும் இந்த மதிப்பீட்டு வரைவு 2020(DRAFT EIA 2020) முற்றிலும் மாற்றி இருக்கிறது.

ஒரு தொழில் நிறுவனம் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமலேயே தொழில் தொடங்கி விடலாம். பிறகு அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் என்று தெரிந்தால் அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் மூடப்படாது. அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்தி தப்பித்து கொள்ளலாம்.

 

புதிய மதிப்பீட்டு வரைவு 2020-ன் தாக்கத்தை சித்தரிக்கும் படம்

2)       சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் இருந்து விலக்கு:

இந்த மதிப்பீடு வரைவு 2020 சட்டமாக வந்தால், உள்நாட்டு நீர் வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், 1,50,000 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கடுமானங்கள், மற்றும் அரசால் ‘பிற யுக்தி’ (Categorized as ‘Other Strategic’) திட்டங்கள் என்று வகைபடுத்தப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படாது.

இந்த ‘பிற யுக்தி’ திட்டங்கள் பற்றிய எந்த தகவலும் மக்களுக்கு சொல்லப்படாது. மேலே குறிப்பிட்ட எந்த திட்டங்களுக்கும் மக்களிடம் கருத்து கேட்கப்படாது!

மலைகளையும், காடுகளையும், நீர்நிலைகளையும் அழிக்கும் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் சூழலில், இந்த புதிய மதிப்பீட்டு வரைவு 2020 நடைமுறைக்கு வந்தால், இவை எவற்றையும் அது பொருட்படுத்தாது.

 

3)      ஆபத்தான திட்டங்களுக்கு அனுமதி:

இதுவரை எல்லா நிறுவன திட்டங்களும் A, B என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டன. தற்போது அதில் B வகை – B1, B2 என்று மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. B2 வகைபடுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றுக்கு(சுமார் 50) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு ஆய்வு திட்டங்கள் B2 வகையில் வருகிறது. இதனால் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல் வாயு உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களும் நடைமுறைக்கு வரும். இதனால் நிலத்தடி நீர், மண், மற்றும் காற்று என மொத்தமாக பாதிப்படையும்.

2020 வரைவுக்கு எதிராக
 இந்திய அளவில் டிரெண்டான டிவிட்டர் பிரச்சாரம் ஹேஷ்டேக்
 

4)      பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாது:

இந்த மதிப்பீட்டு வரைவு 2020 நடைமுறைக்கு வந்தால் இந்த தொழில் நிறுவனங்கள் விதிகளை மீறி செயல்பட்டால் அது குறித்து விதியை மீறிய அந்த நிறுவனமோ அல்லது அரசு தரப்போ தான் புகார் அளிக்க முடியும். திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போல் தோன்றுகிறதா? ஆம், அதை தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செய்ய விரும்புகிறது.

தற்போது தொழில் நிறுவனங்கள் அரையாண்டு இணக்க அறிக்கையை(Compliance Report) தாக்கல் செய்து வருகின்றன, அதாவது வருடம் இருமுறை. புதிய மதிப்பீட்டு வரைவு 2020 படி வருடம் ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்தால் போதுமானது. இது நிறுவனங்களின் பொறுப்பை மேலும் குறைத்துவிடுகிறது.

நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் அதன் திட்டங்களை வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்கப்படும். முன்னதாக அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் இருந்தது. தற்போது அதை 20 நாட்களாக குறைக்கப் போகிறார்கள்.

சென்னையில் கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA2020) ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாநில மொழிகளில் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இவ்வளவு மோசமான வரைவு கொள்கையை மக்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்திருக்கிறது மோடி அரசு. இதற்காக கண்டனம் தெரிவித்து கர்நாடகா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் இந்த புதிய வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 

உலகில் உள்ள பிற நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மேலும் வலிமையாக்கி வரும் இந்த சூழலில், மோடியின் அரசோ அதை மேலும் நீர்த்துப்போக செய்வதை தான் நாம் பார்க்க முடிகிறது.

சுமார் 83 பக்கங்கள் கொண்ட இந்த புதிய அறிக்கையில் இருந்து இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முக்கியமான சில மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. 

இப்படி பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மக்களின் வாயை அடைத்து அவர்கள் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகவும் உள்ள இந்த சட்ட திருத்தத்தின் விளைவாக நம் சுற்றுச்சூழல் பாதிப்படைவதால், இது இந்தியர்களையும் இந்தியாவையும் சேர்ந்தே தான் பாதிக்கும். 


அன்புடன்,

ஜெகன்