தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்குப் பெயர் போன நாடு. ஆனால், அதை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டது. 2021 தேர்தலின் போது முருகனின் வேலை எடுத்த திமுகவிற்கு, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் மக்கள் கொண்டாட ஏன் அனுமதிக்க மனமில்லை?
சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காகப் பெரும்பான்மை மக்களின் உரிமையை மறுப்பதா? அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காலம் தாழ்த்தி கலவரம் ஏற்படும் வகையில் திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
முருகன் தமிழர்களின் கடவுள். முருகனின் அறுபடை வீட்டில் உள்ள ஆறு கோவில்களில் முதல் கோவில் திருப்பரங்குன்றம் தான். இதில் மக்கள் தங்கள் கடவுளை வழிபடுவதில் திமுக அரசுக்கு ஏன் இவ்வளவு ஒவ்வாமை?
மதக் கலவரம் வந்துவிடும் என்று அஞ்சுகிறதா திமுக அரசு?
நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் 5000க்கும் அதிகமானோருக்குச் சம்பந்தி வழங்கப்பட்டது. நாகூர் தர்கா என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி சாகுல் ஹமீது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. இங்கு சாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தினரும் வந்து வழிபடுகின்றனர். நாகூர் தர்கா இருக்கும் இடம் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மராத்தா மன்னர்களும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கி வந்தனர் என்பதே வரலாறு.
அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்திற்கு வருவோம். அங்கு செல்லியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோரும் ஆடி மாதம் ஒட்டி நடைபெற்று வருகிறது. அங்குள்ள இந்து-முஸ்லீம் மதத்தினருக்கு இடையே 1912 முதலே சிறு பகைமை இருந்து வந்தது. 1990ல் அங்கு நடந்த பிரச்சனைக்குப் பிறகு அங்கு திருவிழா நடப்பதில் பதற்றம் நிலவி வந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு அங்குள்ள இஸ்லாமிய சபையினர், இஃப்தார் நோன்புக்கும் தர்காவின் சந்தனக்கூடு தேர் திருவிழாவிற்கும் கிராமத்தில் வசிக்கும் இந்துக்களை அழைத்தனர். அதில் கிராமத்தின் இந்து மக்கள் கலந்துகொண்டனர். அதேபோல் செல்லியம்மன் கோவில் திருவிழாவிற்கும் அங்குள்ள இஸ்லாமியர்கள் அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதேபோல், வி.களத்தூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலின் பூரணி பொங்கல் மாவிலக்கு சுவாமி திருவீதி உலாவிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டு மதநல்லிணக்கத்தைப் போற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசவளநாடு புதூர் எனும் கிராமம் மத நல்லிணகத்திற்குப் புகழ் பெற்றது. அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் இந்துக்களே. எனினும், மொஹரம் பண்டிகையின் போது அங்குள்ள சாவடியில் அமைந்துள்ள அல்லா கோவிலைச் சுத்தம் செய்து, பச்சை கொடி ஏற்றி, பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். மொஹரம் பண்டிகையின் போது வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊரான காசவளநாடு புதூருக்கு வருகை தருகின்றனர். பெண்களும் குழந்தைகளும் பானைகளில் பானகம், பொரி, வெல்லம் ஆகியவற்றை ஊர்வலமாகக் கொண்டு வந்து அல்லா கோவிலில் படைத்து பூஜை செய்து அதை கிராம மக்களுக்குக் கொடுக்கின்றனர்.
தமிழ் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு வாழ தான் விரும்புகிறார்கள்.
இதே போல் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் அறுபடைவீட்டு முருகன் கோவில்களில் முதல் கோவிலான அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் சிக்கந்தர் ஷா என்ற மதுரை சுல்தான் மன்னரின் கல்லறையும் தர்காவும் அமைந்துள்ளன.
இந்த மலையில் தான் இஸ்லாமியர்கள் அவர்களின் வழிபாட்டை நடத்துகின்றனர். அதேபோல், முருக பக்தர்களும் தங்களின் கடவுளை வழிபடுகின்றனர். மேலே குறிப்பிட்டது போல் இதே கோவிலில் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவைக் கொண்டாடினால் மதக் கலவரம் வந்துவிடுமா!?
அருகாமையில் உள்ள மாநிலமான கேரளாவில் மிகப் பெரிய கோவில் சபரிமலை. அங்கு உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் சுமார் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர். இதில் விஷேசம் என்ன என்றால், ஐயப்பன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் முன் எரிமேலியில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குச் செல்கின்றனர். அங்கு பேட்டை துள்ளல் என்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகே சபரிமலைக்கான தங்கள் யாத்திரையைத் துவங்குகின்றனர். இவ்வளவு பெரிய கோவிலில் அற்புதமாக மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படும்போது ஏன் தமிழ் நாட்டில் இது சாத்தியமில்லை? சாத்தியம் இல்லாமலா நாகூர் தர்கா, வி.களத்தூர், காசவளநாடு புதூர் போன்ற பல பகுதிகளில் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது?
திமுக அரசுக்கு மத நல்லிணக்கத்தைக் காக்கும் எண்ணம் இல்லை. மாறாக, மத எதிர்ப்பைக் கையில் எடுத்து சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைத் தன்வசம் இழுக்க வேண்டும் என்ற திட்டமே உள்ளது. இதற்காக எல்லா நாடகங்களையும் மேற்கொள்கிறார்கள். தேர்தல் வரும் வரை மேலும் பல புதுப் புது நாடகங்களையும் அரங்கேற்றுவார்கள்.
2021 தேர்தல் வரும் முன் வேலைக் கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அதே முருக பக்தர்களுக்குக் கார்த்திகை தீபம் பண்டிகையின் போது தீபம் ஏற்ற இவ்வளவு அடக்குமுறையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
திமுகவினர் முருகனின் வேலைக் கையில் எடுத்தார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் நாட்டின் கோவில்களைக் கொள்ளையடித்தார்கள். அனைத்தையும் உறுவிவிட்டு இப்போது தமிழர் கடவுள் முருகனைக் கோவணத்துடன் நடுத்தெருவில் நிற்கவிட்டார்கள். இது தான் திராவிட மாடல் அரசு.
அன்புடன்,
ஜெகன் கஜேந்திரன்