சனி, 6 டிசம்பர், 2025

தமிழ் நாட்டில் மத நல்லிணக்கம் சாத்தியமில்லையா?

தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்குப் பெயர் போன நாடு. ஆனால், அதை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டது. 2021 தேர்தலின் போது முருகனின் வேலை எடுத்த திமுகவிற்கு, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் மக்கள் கொண்டாட ஏன் அனுமதிக்க மனமில்லை?

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காகப் பெரும்பான்மை மக்களின் உரிமையை மறுப்பதா? அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காலம் தாழ்த்தி கலவரம் ஏற்படும் வகையில் திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.

முருகன் தமிழர்களின் கடவுள். முருகனின் அறுபடை வீட்டில் உள்ள ஆறு கோவில்களில் முதல் கோவில் திருப்பரங்குன்றம் தான். இதில் மக்கள் தங்கள் கடவுளை வழிபடுவதில் திமுக அரசுக்கு ஏன் இவ்வளவு ஒவ்வாமை?

மதக் கலவரம் வந்துவிடும் என்று அஞ்சுகிறதா திமுக அரசு?

நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் 5000க்கும் அதிகமானோருக்குச் சம்பந்தி வழங்கப்பட்டது. நாகூர் தர்கா என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி சாகுல் ஹமீது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. இங்கு சாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தினரும் வந்து வழிபடுகின்றனர். நாகூர் தர்கா இருக்கும் இடம் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மராத்தா மன்னர்களும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கி வந்தனர் என்பதே வரலாறு.

அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்திற்கு வருவோம். அங்கு செல்லியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோரும் ஆடி மாதம் ஒட்டி நடைபெற்று வருகிறது. அங்குள்ள இந்து-முஸ்லீம் மதத்தினருக்கு இடையே 1912 முதலே சிறு பகைமை இருந்து வந்தது. 1990ல் அங்கு நடந்த பிரச்சனைக்குப் பிறகு அங்கு திருவிழா நடப்பதில் பதற்றம் நிலவி வந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு அங்குள்ள இஸ்லாமிய சபையினர், இஃப்தார் நோன்புக்கும் தர்காவின் சந்தனக்கூடு தேர் திருவிழாவிற்கும் கிராமத்தில் வசிக்கும் இந்துக்களை அழைத்தனர். அதில் கிராமத்தின் இந்து மக்கள் கலந்துகொண்டனர். அதேபோல் செல்லியம்மன் கோவில் திருவிழாவிற்கும் அங்குள்ள இஸ்லாமியர்கள் அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதேபோல், வி.களத்தூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலின் பூரணி பொங்கல் மாவிலக்கு சுவாமி திருவீதி உலாவிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டு மதநல்லிணக்கத்தைப் போற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசவளநாடு புதூர் எனும் கிராமம் மத நல்லிணகத்திற்குப் புகழ் பெற்றது. அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் இந்துக்களே. எனினும், மொஹரம் பண்டிகையின் போது அங்குள்ள சாவடியில் அமைந்துள்ள அல்லா கோவிலைச் சுத்தம் செய்து, பச்சை கொடி ஏற்றி, பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். மொஹரம் பண்டிகையின் போது வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊரான காசவளநாடு புதூருக்கு வருகை தருகின்றனர். பெண்களும் குழந்தைகளும் பானைகளில் பானகம், பொரி, வெல்லம் ஆகியவற்றை ஊர்வலமாகக் கொண்டு வந்து அல்லா கோவிலில் படைத்து பூஜை செய்து அதை கிராம மக்களுக்குக் கொடுக்கின்றனர்.

தமிழ் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு வாழ தான் விரும்புகிறார்கள்.

இதே போல் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் அறுபடைவீட்டு முருகன் கோவில்களில் முதல் கோவிலான அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் சிக்கந்தர் ஷா என்ற மதுரை சுல்தான் மன்னரின் கல்லறையும் தர்காவும் அமைந்துள்ளன.

இந்த மலையில் தான் இஸ்லாமியர்கள் அவர்களின் வழிபாட்டை நடத்துகின்றனர். அதேபோல், முருக பக்தர்களும் தங்களின் கடவுளை வழிபடுகின்றனர். மேலே குறிப்பிட்டது போல் இதே கோவிலில் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவைக் கொண்டாடினால் மதக் கலவரம் வந்துவிடுமா!?

அருகாமையில் உள்ள மாநிலமான கேரளாவில் மிகப் பெரிய கோவில் சபரிமலை. அங்கு உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் சுமார் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர். இதில் விஷேசம் என்ன என்றால், ஐயப்பன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் முன் எரிமேலியில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குச் செல்கின்றனர். அங்கு பேட்டை துள்ளல் என்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகே சபரிமலைக்கான தங்கள் யாத்திரையைத் துவங்குகின்றனர். இவ்வளவு பெரிய கோவிலில் அற்புதமாக மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படும்போது ஏன் தமிழ் நாட்டில் இது சாத்தியமில்லை? சாத்தியம் இல்லாமலா நாகூர் தர்கா, வி.களத்தூர், காசவளநாடு புதூர் போன்ற பல பகுதிகளில் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது?

திமுக அரசுக்கு மத நல்லிணக்கத்தைக் காக்கும் எண்ணம் இல்லை. மாறாக, மத எதிர்ப்பைக் கையில் எடுத்து சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைத் தன்வசம் இழுக்க வேண்டும் என்ற திட்டமே உள்ளது. இதற்காக எல்லா நாடகங்களையும் மேற்கொள்கிறார்கள். தேர்தல் வரும் வரை மேலும் பல புதுப் புது நாடகங்களையும் அரங்கேற்றுவார்கள்.

2021 தேர்தல் வரும் முன் வேலைக் கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அதே முருக பக்தர்களுக்குக் கார்த்திகை தீபம் பண்டிகையின் போது தீபம் ஏற்ற இவ்வளவு அடக்குமுறையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

திமுகவினர் முருகனின் வேலைக் கையில் எடுத்தார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் நாட்டின் கோவில்களைக் கொள்ளையடித்தார்கள். அனைத்தையும் உறுவிவிட்டு இப்போது தமிழர் கடவுள் முருகனைக் கோவணத்துடன் நடுத்தெருவில் நிற்கவிட்டார்கள். இது தான் திராவிட மாடல் அரசு.

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்

வியாழன், 4 டிசம்பர், 2025

மத அரசியலைக் கையில் எடுக்கும் திமுக

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குக் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. ஆனால், இரண்டு நாள்கள் அமைதி காத்து புதன்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியுடன் மத அரசியலில் ஈடுபட்டு தமிழர்களின் பண்டிகையைச் சீர்குலைத்துள்ளது திமுக அரசு. இதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான தனது மத அரசியல் விளையாட்டைத் திமுக கையில் எடுத்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது ஆளும் திமுக அரசு. நேற்றைய தினம் கோயிலில் தீபம் ஏற்ற தடை விதித்து 144 தடை போடுவதற்குப் பதிலாக இந்த நடவடிக்கையை ஏன் முன்பே திமுக அரசு செய்யத் தவறியது?

திமுக அரசின் நோக்கம் மத அரசியலை எதிர்ப்பதா அல்லது தமிழர்களின் கார்த்திகை தீபக் கொண்டாட்டத்தைச் சீர்குலைப்பதா?

திமுக எதையும் முதலில் செய்வதில்லை. அது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை மரணமாக இருந்தாலும் நடவடிக்கை இல்லை. 2023ல் மரக்காணம் மற்றும் பெரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். ஆனால், அந்த மரணங்கள் நிகழ்ந்த பிறகும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல் கள்ளக்குறிச்சியில் 68 பேர் மீண்டும் கள்ளச்சாரயம் குடித்து இறந்தனர். இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே முக்கிய காரணம்.

மத அரசியல் என்ன திமுகவிற்குப் புதிதா? வருணாசிரமத்தின் மறு உருவமே திமுக தானே. பிறப்பால் ஒருவரது தொழிலை முடிவு செய்வது தான் வருணாசிரமம். திமுகவின் கொள்கையே ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே தலைவராக முடியும் என்பதும் ஆட்சிக்கு வர முடியும் என்பதும் வருணாசிரமத்தின் அச்சு வடிவம் தானே. இதைக் களையாமல் திமுகவால் மத அரசியலை எதிர்கொள்ள முடியாது. அது ஒரு நாளும் நடக்காத காரியம்.

திமுகவின் நலனுக்காகத் தமிழ்நாட்டைப் பலிகடா ஆக்குவதா? 2006ல் இதேபோல் தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஒன்றியத்தில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருகாமை நாட்டில் தமிழ் இனப்படுகொலை நடந்தபோதும் அமைதி காத்து வந்தது திமுக. இன்றும் அதே காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது திமுக. தமிழினத்தன் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் திமுகவால் தமிழீழத் தமிழர்களுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்ய முடியுமா? இனப்படுகொலை செய்யப்பட்ட 1,50,000 தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் செய்ய முடியாத ஓர் அரசு வேறு எதைச் சாதித்து விடமுடியும்?

திமுகவின் குறிக்கோள் என்ன? தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதா? எதைத் தீர்த்து வைத்தார்கள்? நீட் தேர்வை ரத்து செய்து விட்டார்களா? ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்துவிட்டார்களா? சாராயப் பிரச்சனையைச் சரி செய்துவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதெல்லாம் சரி செய்ய திராணி இல்லாத ஓர் அரசை எப்படி நல்லாட்சி என்று சொல்ல முடியும்?

பாஜகவோ காங்கிரஸோ இரண்டும் தமிழ் நாட்டிற்குத் தேவையில்லாத ஆணிகள் தான், தமிழர் விரோதக் கட்சிகள் தான். காங்கிரஸ் கொஞ்சம் மோசமான கட்சி, பாஜக ரொம்ப மோசமான கட்சி என்றெல்லாம் பேசுவது அயோக்கியர்களின் பேச்சு. கெட்டவன் கெட்டவன் தான். இருவரும் தமிழர்களின் எதிரிகள் தான். ஒருவரை மட்டும் எதிர்ப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். எனவே, அதிமுக-பாஜக கூட்டணியைச் சாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுமா? உங்கள் சுயநலத்திற்காகத் தமிழர் நலனைப் பலி கொடுப்பதா? உங்கள் சுயநலமே ஓர் இனப்படுகொலைக்குக் கொண்டு சென்றது.

பாஜக வந்தால் தமிழ் நாட்டை 2000 வருடம் பின்னுக்குக் கொண்டு செல்லும் என்று சொல்பவர்கள், ஏன் மன்னராட்சி முறையைப் பின்பற்றுகிறீர்கள்? திமுகவோ காங்கிரஸோ ஏன் வருணாசிரமத்தை விளக்கிக்கொள்ளக்கூடாது? முற்போக்கு அரசியலை உங்கள் கட்சியில் இருந்து ஏன் தொடங்கக்கூடாது?

கொள்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, 2026ல் கருணாநிதி குடும்பத்தில் இல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முன்வருமா? நாடகம் வேண்டுமானால் போடுவீர்களே தவிர, அதை நடைமுறைப்படுத்த மாட்டீர்கள். பிறகு எதற்காகச் சமூக நீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய வேஷங்கள்? உங்கள் சொந்தக் கட்சி கொள்கையையே காலில் போட்டு மிதித்துவிட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதாகப் பேசுவதெல்லாம் வெறும் பிதற்றல் தான். மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.

மற்ற எவரையும் விட திமுகவிற்கே தனது தவறுகள் குறித்து நன்றாகத் தெரியும். அவற்றை மறைக்கவே 2026 தேர்தல் முடியும் வரை எல்லா குழப்பங்களையும் திமுக அரசு தமிழ்நாட்டில் செய்யும். ஆனால், திமுக தன்னுடைய தவறுகளைச் சரி செய்யாமல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

 

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்