வியாழன், 4 டிசம்பர், 2025

மத அரசியலைக் கையில் எடுக்கும் திமுக

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குக் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. ஆனால், இரண்டு நாள்கள் அமைதி காத்து புதன்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவைத் தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியுடன் மத அரசியலில் ஈடுபட்டு தமிழர்களின் பண்டிகையைச் சீர்குலைத்துள்ளது திமுக அரசு. இதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான தனது மத அரசியல் விளையாட்டைத் திமுக கையில் எடுத்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது ஆளும் திமுக அரசு. நேற்றைய தினம் கோயிலில் தீபம் ஏற்ற தடை விதித்து 144 தடை போடுவதற்குப் பதிலாக இந்த நடவடிக்கையை ஏன் முன்பே திமுக அரசு செய்யத் தவறியது?

திமுக அரசின் நோக்கம் மத அரசியலை எதிர்ப்பதா அல்லது தமிழர்களின் கார்த்திகை தீபக் கொண்டாட்டத்தைச் சீர்குலைப்பதா?

திமுக எதையும் முதலில் செய்வதில்லை. அது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை மரணமாக இருந்தாலும் நடவடிக்கை இல்லை. 2023ல் மரக்காணம் மற்றும் பெரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். ஆனால், அந்த மரணங்கள் நிகழ்ந்த பிறகும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல் கள்ளக்குறிச்சியில் 68 பேர் மீண்டும் கள்ளச்சாரயம் குடித்து இறந்தனர். இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே முக்கிய காரணம்.

மத அரசியல் என்ன திமுகவிற்குப் புதிதா? வருணாசிரமத்தின் மறு உருவமே திமுக தானே. பிறப்பால் ஒருவரது தொழிலை முடிவு செய்வது தான் வருணாசிரமம். திமுகவின் கொள்கையே ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே தலைவராக முடியும் என்பதும் ஆட்சிக்கு வர முடியும் என்பதும் வருணாசிரமத்தின் அச்சு வடிவம் தானே. இதைக் களையாமல் திமுகவால் மத அரசியலை எதிர்கொள்ள முடியாது. அது ஒரு நாளும் நடக்காத காரியம்.

திமுகவின் நலனுக்காகத் தமிழ்நாட்டைப் பலிகடா ஆக்குவதா? 2006ல் இதேபோல் தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஒன்றியத்தில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருகாமை நாட்டில் தமிழ் இனப்படுகொலை நடந்தபோதும் அமைதி காத்து வந்தது திமுக. இன்றும் அதே காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது திமுக. தமிழினத்தன் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் திமுகவால் தமிழீழத் தமிழர்களுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்ய முடியுமா? இனப்படுகொலை செய்யப்பட்ட 1,50,000 தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் செய்ய முடியாத ஓர் அரசு வேறு எதைச் சாதித்து விடமுடியும்?

திமுகவின் குறிக்கோள் என்ன? தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதா? எதைத் தீர்த்து வைத்தார்கள்? நீட் தேர்வை ரத்து செய்து விட்டார்களா? ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்துவிட்டார்களா? சாராயப் பிரச்சனையைச் சரி செய்துவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதெல்லாம் சரி செய்ய திராணி இல்லாத ஓர் அரசை எப்படி நல்லாட்சி என்று சொல்ல முடியும்?

பாஜகவோ காங்கிரஸோ இரண்டும் தமிழ் நாட்டிற்குத் தேவையில்லாத ஆணிகள் தான், தமிழர் விரோதக் கட்சிகள் தான். காங்கிரஸ் கொஞ்சம் மோசமான கட்சி, பாஜக ரொம்ப மோசமான கட்சி என்றெல்லாம் பேசுவது அயோக்கியர்களின் பேச்சு. கெட்டவன் கெட்டவன் தான். இருவரும் தமிழர்களின் எதிரிகள் தான். ஒருவரை மட்டும் எதிர்ப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். எனவே, அதிமுக-பாஜக கூட்டணியைச் சாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுமா? உங்கள் சுயநலத்திற்காகத் தமிழர் நலனைப் பலி கொடுப்பதா? உங்கள் சுயநலமே ஓர் இனப்படுகொலைக்குக் கொண்டு சென்றது.

பாஜக வந்தால் தமிழ் நாட்டை 2000 வருடம் பின்னுக்குக் கொண்டு செல்லும் என்று சொல்பவர்கள், ஏன் மன்னராட்சி முறையைப் பின்பற்றுகிறீர்கள்? திமுகவோ காங்கிரஸோ ஏன் வருணாசிரமத்தை விளக்கிக்கொள்ளக்கூடாது? முற்போக்கு அரசியலை உங்கள் கட்சியில் இருந்து ஏன் தொடங்கக்கூடாது?

கொள்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, 2026ல் கருணாநிதி குடும்பத்தில் இல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முன்வருமா? நாடகம் வேண்டுமானால் போடுவீர்களே தவிர, அதை நடைமுறைப்படுத்த மாட்டீர்கள். பிறகு எதற்காகச் சமூக நீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய வேஷங்கள்? உங்கள் சொந்தக் கட்சி கொள்கையையே காலில் போட்டு மிதித்துவிட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதாகப் பேசுவதெல்லாம் வெறும் பிதற்றல் தான். மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.

மற்ற எவரையும் விட திமுகவிற்கே தனது தவறுகள் குறித்து நன்றாகத் தெரியும். அவற்றை மறைக்கவே 2026 தேர்தல் முடியும் வரை எல்லா குழப்பங்களையும் திமுக அரசு தமிழ்நாட்டில் செய்யும். ஆனால், திமுக தன்னுடைய தவறுகளைச் சரி செய்யாமல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

 

அன்புடன்,

ஜெகன் கஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக