சனி, 7 ஜனவரி, 2017

கருப்பு பணமும் சாமானியர்களும்



2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் கையில் எனது ஸ்மார்ட் ஃபோனில் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பதிவில் வித்தியாசமான ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை ஒருவர் தனது கையில் வைத்திருப்பது போல ஒரு புகைப்படம். அந்த புகைப்பட பதிவின் விளக்கம் – இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அவை சட்ட விரோதமானது. அதற்கு பதிலாக இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் வருவது வழக்கம் தானே, அதற்காக இப்படியான ஒரு வதந்தியை லட்சம் மக்கள் பின் தொடரும் ஒரு குழு பரப்புவதா என்று முதலில் தோன்றியது. ஒரு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. அப்போது என் வீட்டில் இருந்தேன். தொலைக்காட்சியில் செய்தி சேனல்களை பார்க்கலாம் என்று ஒரு சேனலுக்கு மாற்றினேன். பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை ஓடிக் கொண்டிருந்தது. முக்கியச் செய்தி என்று இணையதளத்தில் படித்த செய்தியை பார்த்தேன். உறுதி படுத்திக் கொண்டேன்.

இப்படியும் ஒரு விஷயம் நடக்குமா என்று நினைக்கும் வேளையில், நடந்து விட்டது என்று ஊர்ஜிதப்படுத்தியது அந்த தருணம்.

அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்த செய்தி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது, நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை, அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த ஏ.டி.எம்-களும் வேலை செய்யாது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தலாம். பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதற்கு கால அவகாசம் டிசம்பர் 30-ம் தேதி வரையில்(அதாவது 50 நாட்கள்). அதன் பிறகு செல்லாக் காசை மாற்ற வேண்டும் என்றால் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை அடையாள அட்டை நகல் கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். அடுத்த 72 மணி நேரத்திற்கு அரசு மருத்துவமனைகளில், அரசு பேருந்து நிலைய, இரயில் நிலைய மற்றும் விமான நிலைய கவுண்டர்களில் பழைய நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் நிலையங்கள், சுடுகாடுகள், விமான நிலையங்களில் உள்ள அந்நிய செலாவணி நிலையங்கள் ஆகிய இடங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

வங்கிகளில் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாயும், ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம். ஏ.டி.எம்-களில் ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும்.

நாட்டின் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அறிக்கையில் சொல்லி இருந்தார் பிரதமர் மோடி. இதன் மூலமாக தீவிரவாதத்திற்காக பயன்படுத்தப்படும் கருப்பு பணத்தையும் நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

மேலே குறிப்பிட்டிருந்தவை யாவும் ஒரே நாளில் கொண்டு வரப் பட்ட மாபெரும் மாற்றங்கள், கருப்பு பணத்திற்கு எதிராக! நினைத்துப் பார்க்கவே வியக்க வைக்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். இந்திய மக்கள் தொகை 130 கோடி. இவர்கள் அனைவரின் கைகளில் இருக்கும் பணத்தையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. ஆனால் அதன் தாக்கம் எப்படிப் பட்டது என்பது தான் இதில் முக்கியம்.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்! ஒருவர் தன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறார். அவர் கையில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இருக்கிறது. இரவு 8 மணிக்கு பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார். வெளியூருக்கு புதிதாக சேன்ற நபர் எங்கு சென்று பணம் எடுப்பார்? ஏ.டி.எம் ஏ.டி.எம்-மாக அலைந்து திரிந்து பணம் எடுப்பதற்காக ஒன்றும் அவர் வெளியூர் செல்லவில்லை. அதன் காரணமாக தான் கையில் பணம் வைத்திருக்கிறார். மறுநாள் ஏ.டி.எம்-கள், வங்கிகள் எதுவும் வேலை செய்யாது!

அவர் அந்த ஒரு நாள் எங்கு சென்று உணவு வாங்குவார்? உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்ததா? இல்லை. அவரை உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு தள்ள யாருக்கு உரிமை இருக்கிறது? சுதந்திர இந்தியாவில் அவரது சுதந்திரத்தை பறிக்க யாருக்கு உரிமை இருக்கிறது? இதற்கு யார் பொறுப்பு? பாதிக்கப் பட்ட நபர் சர்க்கரை நோய் உள்ள ஒரு முதியவர் என்றால் என்ன ஆகும்? அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டும் என்றால், அவர் செல்லும் வழியில் மயங்கி விழுந்து இறந்தே போவார். இப்படியான ஒரு மரணம் இந்த அறிவிப்பு வந்த பிறகு நிகழ்ந்திருக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. நிஜத்தில் 33 பேர் செல்லாக்காசு விவகாரத்தால் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. இது தான் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய சிரமமா? இப்படித் தான் புதிய இந்தியா பிறந்ததா!!?

வீட்டில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் வங்கிகளுக்கு சென்று தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் அனைவரது பணமும் கணக்கில் வந்துவிடும். இத்தனை நாட்கள் கணக்கில் காட்டப் படாத கருப்பு பணம் எப்படியும் பிடிபடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஆனால் நடந்தது அதுவா?

சாமானியர்கள் தான் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசலிலும் நாள்தோறும் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். கருப்பு பணம் வைத்திருக்கும் நபர்களா வங்கியில் சென்று காத்துக் கிடந்தார்கள்? ஒரு பணக்காரனையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ வங்கியின் வரிசையில் நின்று பணம் மாற்றியதை நாம் பார்த்தோமா? அவர்களிடம் இருக்கும் பணம் எவ்வாறு மாற்றப்பட்டது? இல்லை அவர்களிடம் கருப்பு பணமே இல்லையா? அது தான் செல்லாக்காசு நடவடிக்கையின் அதிர்ச்சி தகவலா?

யாரிடம் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்பது அரசு புலனாய்வுத் துறைக்கு நன்றாகவே தெரியும். செல்லாக்காசு நடவடிக்கை கருப்பு பணத்தை கணக்கில் கொண்டுவர தான் என்றால், கருப்பு பணத்தை பதுக்கியவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டிருக்கலாம். அதை முதலில் செய்யாமல் இப்படி மக்களை துன்புறுத்துவதால் நிலைமை இன்னும் மோசமாக தான் ஆகும்.

இந்த நடவடிக்கையால் கருப்பு பணத்தை ஓரளவிற்கு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அரசு சொன்னால், தற்போதும் இனிமேலும் கருப்பு பணம் உருவாகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் செல்லாக்காசு நடவடிக்கையும் செல்லாமல் போய் விடும். 50 நாட்கள் மக்கள் பட்ட துயரங்கள் வீணாகிவிடும்.

அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இனி வரப்போகும் கருப்பு பணத்தின் புழக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திட்டத்தை அமல்படுத்துவதற்கான அடிப்படை வசதிகளை அரசு அமைத்திட வேண்டும்.

அன்புடன்
ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக