ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இரண்டு பிரச்சனைகள்!


பிரச்சனை 1 :

அக்டோபர் 17-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது. எனவே இனி தண்ணீர் பிரச்சனை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று நாம் நினைத்தோமேயானால், நம்மைவிட ஒரு சிறந்த முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.

காரணம், பிரச்சனை மழையல்ல. சென்னையை பொறுத்தவரை மழையின் சராசரி அளவு 1350-1400 மிமீ ஆக இருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் சராசரியை விடவும் அதிகம். ஆக, பிரச்சனை கிடைக்கும் மழையை நாம் முழுமையாக போதுமான அளவுக்கு சேமித்து வைக்கிறோமா இல்லையா என்பதில் தான் இருக்கிறது.

இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமல் பல வருடங்களாக இருப்பது, நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பது. இதனால் முழுமையாக சேமிக்கபடாமல் மழை நீரானது கடலில் சென்று கலக்கிறது. இதுவே இங்கு வாடிக்கையாக இருக்கிறது.

இதைவிட ஒரு முக்கிய பிரச்சனை ஒன்று இருக்கிறது.

அதுதான், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது!

நீர்நிலைகளை அதிகமாக ஆக்கிரமிப்பு செய்வது மக்களை விட அரசாங்கம் தான். அரசாங்கம் என்பது ஆட்சியாளர்கள், அதிகாரிகள். இவர்கள் பொறுப்பற்று நடப்பது தான் நமது தண்ணீர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அரசு அலுவலகங்களுக்காகவும் திட்டங்களுக்காகவும் நீர்நிலைகளை மறுவகைப்பாடு(Reclassification) செய்து அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். பள்ளிக்கரணை சதுப்புநிலம், எண்ணூர் நீர்பகுதி என முக்கியமான நீர்நிலை பகுதிகள் அரசு திட்டங்களுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

தாமரைக்கேணி ஏரி மிது கட்டப்படும் காவல்நிலையம்

பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியின் மேல் சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து துறையின் RTO அலுவலகத்திற்காக அரசு 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதை எதிர்த்து சூழலியல் போராளி ஈஞ்சம்பாக்கம் சேகர் வழக்கு தொடர்ந்து அதை தடுத்தார்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 15000 ஏக்கராக இருந்திருக்கிறது. இன்று அது வெறும் 1500 ஏக்கராக சுருங்கியுள்ளது. 1980-களில் பள்ளிக்கரணையை ஆய்வு செய்த ஒரு நிறுவனம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்தாலே சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்று ஆய்வறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், எண்ணூர் நீரோடை பகுதியில் கலந்து சுற்றுச்சுழலை மாசு படுத்துகிறது. எண்ணூர் நீரோடையின் மேல் அதானியின் துறைமுகம் மற்றும் மின் ஆலைகள் அமைப்பது அந்த பகுதியை பெரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்கு ஆட்படுத்தும் என்று மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரசாங்கம் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ள நேரமில்லாமல் இருக்கிறது.

அம்பத்தூர் ஏரி 1954-ஆம் வருடம் 1146.5 ஏக்கராக இருந்திருக்கிறது. இன்று அது வெறும் 410 ஏக்கராக சுருங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஏரியின் நடுவில் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் வீட்டுவசதி வாரியத்திற்காக எடுத்துக்கொண்டதால் அம்பத்தூர் ஏரியே இரண்டாக பிரிந்து அயப்பாக்கம் ஏரி என்ற பெயரில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. ஏரியின் மீது ஆயிரக்கணக்கான வீடுகள் தற்போது இருக்கிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அம்பத்தூர் ஏரி மெல்ல இறந்துகொண்டிருக்கிறது.

சென்னை நந்தம்பாக்கம் அருகே அடையாற்றின் மீது இருக்கும் 6 ஏக்கர் நிலத்தை ப்ளு நைல் ப்ராபெர்டீஸ் (Blue Nile Properties) என்ற கட்டுமான நிறுவனம் 2004 முதல் மறுவகைப்பாடு செய்ய முயன்று வருகிறது. அதற்கு அவர்களிடம் இருக்கும் காரணம், அந்த நிலத்திற்கு பட்டா இருப்பது தான். நீர்நிலைகள் இருக்கும் நிலம் பொது இடமாகும். இதற்கு தனி நபர் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், தாசில்தார் அலுவலகத்தில் முறைகேடுகள் செய்து, லஞ்சம் கொடுத்து இவர்கள் பட்டா வாங்கிவிடுகிறார்கள். அந்த பட்டாவை காட்டி நீர்நிலைகளை மறுவகைப்பாடு செய்துகொள்கிறார்கள். இரண்டும் சட்ட விரோதமானது. அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டால் இத்தகைய சமூக கோளாறுகள் நடைபெறாமல் இருக்கும். உண்மையில் அதிகாரிகள் அப்படி செயல்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.  

சோழிங்கநல்லூரில் தாமரைக்கேணி என்ற ஏரியின் மீது தற்போது காவல்நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 53.97 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்திற்கு தாரைவார்க்க இருக்கிறது. இதுவே இந்த அரசின் நீர்மேலாண்மை கொள்கையின் யோக்கியதையாக இருக்கிறது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதியின் மேல் தொழில் வளர்ச்சி கண்டு மக்களை தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையவிடுவது தான் இவர்களின் திட்டமாக இருக்கிறது.

பிரச்சனை 2 :

சமீபத்தில் எர்த்வாச் என்ற நிறுவனம்(Earthwatch Institute) லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் ‘உலகின் மிக முக்கியமான உயிரினம் தேனீக்கள் தான்’ என்றும் அதே நேரத்தில் விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது: ‘தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டது’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு முக்கியமான விடயத்தை அறிவித்துவிட்டு அதைவிட முக்கியமான இன்னொரு விடயத்தையும் கூடவே அறிவித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

நமக்குள் எழும் முதல் கேள்வி: தேனீக்கள் ஏன் உலகின் மிக முக்கியமான உயிரினம் ஆகிறது?

காரணம், உலகின் உணவு உற்பத்தியில் 70% தேனீக்களை ஏதோ ஒருவகையில் சார்ந்தே இருக்கிறது. ஆக, உணவு உற்பத்தி சீராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தேனீக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

உலகின் வேறு எந்த உயிரினத்திடமும் இல்லாத ஆனால் தேனீக்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு சிறப்பான அம்சம், நோய்களை உருவாக்கக்கூடிய எந்த ஒரு நுண்ணுயிரையும் தேனீக்கள் கொண்டு செல்வதில்லை/பரப்புவதில்லை. இந்த பண்பு தேனீக்களை இன்னும் மேன்மைபடுத்துகிறது. 

பூவிலிருந்து தேனை உரிஞ்சும் தேனீ
மகரந்த சேர்க்கையில் தேனீக்கள் ஈடுபடுவதால் செடிகள் இனப்பெருக்கம் செய்வதன் வழியாக அவற்றை சார்ந்திருக்கும் பல லட்சம் விலங்கினங்கள் உயிருடன் இருக்கிறது. இவற்றை தவிர தேனீக்களிடமிருந்து கிடைக்கும் தேன் மருத்துவகுணம் வாய்ந்தது.

தேனீக்களால் உயிர்வாழ்வது மனிதன் மட்டுமல்ல. விலங்கினங்களும் தாவரங்களும் கூட.

நமக்குள் எழும் இரண்டாவது கேள்வி: ஏன் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்தது?

அதற்கு முக்கிய காரணங்கள் - பெருமளவில் காட்டை அழித்தல், தேனீ கூடு கட்ட பாதுகாப்பான இடம் இல்லாதது, பூக்கள் குறைவாக இருப்பது, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தேனீக்களை பற்றி குறிப்பிட்ட வாக்கியம் இது, “பூமியிலிருந்து தேனீக்கள் மறைந்துவிட்டால் மனிதன் வாழ்வதற்கு வெறும் 4 வருடங்களே இருக்கும்”. தேனீக்களின் முக்கியத்துவத்தையும் மனிதனால் தேனீக்கள் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமான தேனீக்கள் அண்மை காலத்தில் 90% வரை அழிந்துவிட்டது என்பது அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலாக இருக்கிறது.

காடுகளை அழிப்பதில் இருக்கும் அசுரவேகத்தை நாம் வெகுவாக குறைத்துக்கொள்ள வேண்டும். உலகில் ஒரு வினாடிக்கு ஒன்றரை ஏக்கர் அளவுக்கான காடு என்ற விகிதத்தில், ஒவ்வொரு நிமிடமும் 20 கால்பந்து மைதானங்கள் அளவுக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த பத்தியை நீங்கள் படிக்கும் வேளையில் சில ஏக்கர் காடுகள் அழிந்திருக்கும்.

உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் தேனீக்கள் அழிய மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளே! இதனால் கொலம்பியா நாட்டில் கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 34% தேனீக்கள் அழிந்துவிட்டன. உழவில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பல்வேறு காரணங்களால் திணிக்கப்பட்டதே அன்றி உண்மையில் ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகள் என்பது தேவையே இல்லை. அது இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் இன்றுவரை பன்னாட்டு ரசாயன ஆலைய முதலாளிகளின் வணிக நலனை மையப்படுத்தியே திணிக்கப்பட்டது என்பதை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம், நாம் உபயோகிக்கும் அலைபேசியின் அலைகளால் தேனீக்கள் பாதிப்படைகிறது என்ற ஒரு தகவலை முன்வைக்கிறது. அலைபேசியின் அலைகள் தேனீக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் பாதையை மறக்கடிக்க செய்து அதன் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக சொல்லப்படுகிறது.

உயிரியல் அறிஞர் டேனியல் ஃபவரே மற்றும் பல ஆய்வாளர்கள் சேர்ந்து நடத்திய 83 ஆய்வுகளில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால், அலைபேசி அலைகள் இருக்கும் பொழுது தேனீக்கள் சாதாரணமாக போடும் இரைச்சலை விட பத்து மடங்கு அதிகமாக சத்தமிடுகின்றன. அதன் மூலம் மற்ற தேனீக்களிடம் கூட்டைவிட்டு வெளியேறச்சொல்லி எச்சரிக்கை விடுக்கின்றன. முன்பு சொன்னது போல் அலைபேசி அலைகள் தேனீக்களை குழப்பி பாதையை மறக்கடிக்க செய்வதே இதற்கு காரணம்.

மனிதன் புரட்சி, தொழில்நுட்பம் என்று சொல்பவையெல்லாம் அவனுக்கே எதிராக திசை திரும்புகிறது. தேனீக்கள் அழிந்து வரும் இந்த சூழல் நமக்கு முக்கியமாக உணர்த்துவது ஒன்றை தான். அது ரசாயனங்கள் இல்லாத இயற்கை வேளாண்மையை நாம் பின்பற்றுவது.

நாம் இப்போது பார்த்த இரண்டு பிரதான பிரச்சனைகளின் அடிப்படையானது, உயிர் வாழ ஆதாரமான நீர் மற்றும் உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடு தான். இவை இரண்டும் மனிதன் ஏற்படுத்திக்கொண்ட செயற்கையான பிரச்சனைகளே. இயற்கை உருவாக்கியது அல்ல என்பதை கவனிக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு, நீரும் சோறும் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்பது புரியும் என்று நம்புவோம்.

அன்புடன்,

ஜெகன்

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

Rafa Nadal's Epic win at the 20'19' US Open Final!

To Summarise today's US open Men's Singles Finals between Daniil Medvedev and Rafa Nadal,

It was a thriller contest between the two players. Especially for Rafa fans. 

The match seemed to be in favour of Rafa Nadal until the beginning of 3rd set when Nadal was leading 2-0 and it was expected that Nadal would close the match in 3 or 4 sets. 


But, the 6.6ft tall Russian tennis player Daniil Medvedev had other plans for Rafa. His change of technics including serve and volley was very impactful for him to gain more winners. 

The tall Russian tennis player's ability to quickly cover the court and play some brilliant winners placing the ball out of reach for Rafa on the opposite court prolonged the match to a five-setter. 

It was brilliant tennis from both the players. Nadal winning the first two sets while Medvedev capturing the next two. 


The match was evenly poised and more thrilling while entering into the decider set. 

In the fifth set Nadal broke the serve of Medvedev in the fifth game and seventh game allowing him to take a 5-2 lead and serve for the Championship. 

Medvedev saved two Championship points of Nadal. And the Time Violation factor for Nadal played spoil sport as he lost his first serves on a couple of occasions leading to a double fault to give Medvedev a break point win in the eighth game of the decider. 

The match was more thrilled when the game tally became 4-5 with Medvedev winning back to back games. 

For the second time Rafa was serving for the Championship in the match. And this time it was the Russian who returned the serve long to give away Rafa Nadal the Championship point and a fourth U.S Open title. 


That adds to a total of 19 Grand Slam wins for the Champion player Rafa Nadal making him closer to Roger Federer's all time Men's singles Grand Slam record total of 20.


If Nadal was the Champion, Medvedev is surely a contender for the Future of tennis considering his age and his run in the Hard courts this summer. 

The Russian was very humble and made some funny comments at the presentation ceremony winning the hearts of many tennis fans. 

Nadal was seen fully emotional after the win. He collapsed on the court in celebration after winning the match. Tears roll over his eyes while waving to the crowd after the win. 


The US Open organisers had played a montage of all his 19 Grand Slam wins at the big screen in the Arthur Ashe stadium which moved the Spaniard to tears and a bit more emotional. 

The kind of fitness and confidence that Rafa is in and the scheduling that he has planned to allow him to rest for a week off before the Major tournament has all shown more positive outcome for the Spaniard. 

This Epic five setter Grand Slam win is more emotional for Rafa and his fans around the world. 

Vamos Rafa!!!

With love,
Jagan 

ஞாயிறு, 21 ஜூலை, 2019

வாய்மையே வெல்லும்!


தமிழ்நாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வமான சின்னத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கும் வாக்கியம் தான்வாய்மையே வெல்லும்’. ஆனால், அதற்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தான் உண்மை. ஏன் என்று விரிவாக பார்ப்போம்!

தமிழ்நாட்டில் இன்று மிகப் பெரிய ஒரு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்காமல் இருப்பதே ஆகும். நீர்நிலைகளை சரியாக பராமரிக்காவிட்டால், மழைநீரை முழுமையாக சேமிக்க இயலாது. இதன் காரணமாக பருவமழை குறைவாக இருக்கும் வருடங்களில் கடுமையான வறட்சியை நாம் சந்திக்க நேரிடுகிறது. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல!

தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகமாக மழை பொழிவை பெறும் பகுதி சென்னை தான். வருடத்திற்கு சராசரியாக 1350 மில்லிமீட்டர் மழை பொழிவை நாம் பெறுகிறோம். ஆனால், சென்னையின் நீர்நிலைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் கீழே சென்று விட்டதால் மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். குளங்கள், குட்டைகள், ஏரிகள் எல்லாம் ஃபிளாட்களாக மாற்றி விற்கப்பட்டு, மழை வந்தால் தண்ணீரை தேக்கி வைக்க போதுமான இடம் இல்லாமல் காண்க்ரீட்(Concrete) காடாக மாறி வருகிறது சென்னை.

சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டியபெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்’ (CMWSSB), தான் வழங்கிக் கொண்டிருந்த 830 MLD(ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர்) தண்ணீரை ஜூன் 1 ஆம் தேதி முதல் 525 MLD-யாக(52.5 கோடி லிட்டராக) குறைத்துக் கொண்டது. தண்ணீர் பஞ்சம் என்று மக்கள் அரசாங்கத்தை நோக்கி செல்லும் போது, அரசாங்கம் அவர்களை கைவிரித்துவிட்டது.

நிலைத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்கள் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மழைக் காலங்களில் கிடைக்கக் கூடிய தண்ணீரை போதுமான அளவுக்கு செமிக்காமல் கடலில் கலக்கவிட்டு விட்டதால், நிலத்தடி நீரை மீள்நிரப்பு(Ground Water Recharge) செய்யமுடியாமல் போனது. மழைநீர் சேகரிப்பு திட்டம் என்பது வீடுகளில் செய்யப்படுவது மட்டுமல்ல. ஏரிகள், குளங்கள், குட்டைகளில் செய்யப்பட வேண்டியது. அதை இந்த அரசாங்கம் செய்யத் தவறியதன் விளைவாகவே இன்று சென்னை நகரம், தேவைக்கு அதிகமான சராசரி மழைப் பொழிவு இருந்தும் ஒரு பெரும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

கடந்த நான்கு வருடங்களில் 2015 ஆம் ஆண்டு நூற்றாண்டு காணாத பெரு மழை பெய்தது. அதனால் வெள்ளம் என்றார்கள். ஆனால் அதற்கு அடுத்த வருடமே 2016-ல் 140 வருடம் இல்லாத மழைக் குறைவு, அதனால் வறட்சி என்றார்கள். அப்போது 2015-ல் பெய்த மழை நீர் எல்லாம் எங்கே போயிற்று?

2017-ல் சராசரி மழை. 2018-ல் குறைவான மழை. நான்கு வருடங்களில், ஒரு வருடம் அதிகப்படியான மழை, ஒரு வருடம் சராசரி மழை, இரண்டு வருடங்கள் குறைவான மழை. ஆனால், சராசரி மழையின் அளவு 1350 மில்லிமீட்டர். அதிகமாக மழை பொழிவு இருக்கும் காலங்களில் முழுமையாக மழை நீரை சேமித்து வைக்காதது தான், அரசாங்கத்தின் நீர் மேலாண்மையின் தோல்வியை அப்பட்டமாக காட்டுகிறது.

ஒரு நல்ல அரசாங்கம் என்பது தன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வைப்பது தான். ஆனால், தண்ணீர் பஞ்சம் நிலவும் இந்த சூழலில், நிலத்தடி நீர் இல்லாமல் மக்கள் அரசாங்கத்தை நாடினால், ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவை 37% குறைத்துவிட்டது தான் அதிமுக அரசின் சாதனையாக இருக்கிறது. இன்று சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்கு பதிவு செய்தால், 45 நாட்கள் கழித்து தான் 9000 லிட்டர் லாரி தண்ணீர் ஒரு வீட்டிற்கு கிடைக்கிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி மக்கள் தனியார் லாரிகளுக்கு 5-6 மடங்கு அதிக விலையை கொடுத்து தண்ணீர் பெற்று சமாளித்து வருகின்றனர்.

சென்னை குடிநீர் பஞ்சத்தை போக்க சென்னையில் உள்ள 13 நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், மூன்று நீர்நிலைகளில் இருந்து மட்டுமே தற்போது நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி மற்றும் திருநீர்மலை ஏரிகளில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்தாலும் பயன்படுத்த முடியாது என்று கண்டறியப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் இதர கழிவுநீர் கலப்பதால் இவற்றின் நிலை இவ்வாறு மோசமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ‘பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்’ (CMWSSB), தற்போது சுமார் 23.72% அளவு மட்டுமே கழிவுநீரை (பயன்படுத்தப்பட்ட நீரை) சுத்திகரிப்பு செய்கிறது.

சென்னை நகர் பகுதிக்குள் அமைந்திருக்கும் மிகப் பெரிய நீர்நிலை கொரட்டூர் ஏரி(610 ஏக்கர்) என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் ரெட்டேரி(மாதவரம் ஏரி) ஏரிகளின் கொள்ளளவு 0.83 டி.எம்.சி(TMC). இதை இருமடங்காக ஆழப்படுத்தி 1.6 டி.எம்.சி-யாக (TMC) அதிகப்படுத்தினால், சென்னையின் ஒன்றரை மாத கால நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்!

2011 முதல் கடந்த எட்டு வருடங்களாக அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், ஒரு முறை கூட சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளை தூர் வாரவே இல்லை. நீர் மேலாண்மையில் மிக மோசமாக இந்த அரசாங்கம் இருந்து வருகிறது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

ஜனநாயகம்/மக்களாட்சி என்றால், ஆட்சி அதிகாரத்தில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது தான் பொருள். ஆனால், நடைமுறை வேறாகவே இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை, ஜூன் 13-ஆம் தேதி காலையில் அறப்போர் இயக்கம் சார்பாக பதினொரு தன்னார்வலர்கள் சென்னை தரமணி பகுதியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை சமூக தணிக்கை செய்ய சென்றார்கள். அவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அங்கு செல்லும் முன்பே உளவுத்துறையினர் அங்கு இருந்தார்கள். எங்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரித்துவிட்டு, நீர்நிலைகளை ஆய்வு செய்வது நல்லது என்று கூறிவிட்டு சென்றார்கள். ஆனால், பிறகு நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போதே தரமணி ஜெ-13 காவல்நிலைய ஆய்வாளர் தேவராஜ் குறுக்கிட்டு, ஆய்வு செய்ய அனுமதி இல்லை என்று கூறி எங்கள் பதினொரு பேரையும் கைது செய்து தரமணி 100-அடி சாலையிலுள்ள ஹேமா மஹாலில் அடைத்து வைத்தனர். முதலில் அனுமதி பெறவில்லை என்று சொன்னவர்கள், பிறகு ஜனாதிபதி தரமணியில் உள்ள சட்ட கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு வருவதால் பாதுகாப்புக்காக கைது செய்துள்ளதாகவும், அவர் சென்ற பிறகு மதியம் 1 மணிக்கு அனுப்புவதாகவும் கூறினர். 1 மணிக்கு பிறகும் எங்களை அனுப்பவில்லை.

மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட பதினொரு பேரிடமும் ஒரு நோட்டு புத்தகத்தில் கையெழுத்து பெற்று, காவல்துறையின் சொந்த பிணையில் வெளியிடுவதாக கூறி விடுவிப்பு செய்தனர். வழக்கு பதிந்தால் தான் பிணை தர முடியும். எனவே, வழக்கு விவரங்களை(FIR) கேட்டதற்கு, காவல்துறை இணையதளத்தில் எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார் தரமணி காவல்நிலைய ஆய்வாளர் தேவராஜ்.

இணையத்தில் இருந்து பெற்ற வழக்கில், தரமணியை சேர்ந்த மதியழகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தன்னார்வலர்கள் மீது மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை என்பது தெரியவந்தது. மதியழகன் என்பவர், ஏரியை ஆய்வு செய்து கொண்டிருந்த எங்களிடம் வந்து விசாரித்ததாகவும், அதற்கு அவரை ‘ச்சீ போடா’ என்று சொல்லி அவர் நெஞ்சை பிடித்து தள்ளி, தொலைத்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறி எங்கள் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இந்த மதியழகனை இதுவரையில் நாங்கள் யாரும் பார்த்தது கூட கிடையாது. இது முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தினால், காவல்துறையினரால் புனையப்பட்ட பொய்யான வழக்குகள். 

பொய் வழக்கு விவரம்

ஏன் ஒரு ஏரியை ஆய்வு செய்து அரசாங்கத்திடம் மனு கொடுக்க நினைத்தவர்களை அரசாங்கத்தினர் இப்படி நடத்துகிறார்கள்?
சென்னையை சேர்ந்த அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக இயங்கும் ஒரு இயக்கம். அது கடந்த சில வருடங்களாக சென்னை மாநகராட்சியில் நிகழும் அரசாங்க டெண்டர் ஊழல்களையும், அந்த துறையின் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி அவர்களையும் அம்பலத்தி வருகிறது. அதன் காரணமாகவே, அறப்போர் இயக்கத்தை பழி தீர்க்கும் விதமாக, அதன் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல இடர்பாடுகளை கொடுத்து வருகின்றனர். அதில் இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் ஒன்று.

”முதலில் அவர்கள் உன்னை உதாசினப்படுத்துவார்கள். பிறகு உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். பிறகு உன்னிடம் சண்டையிடுவார்கள். இறுதியில், நீ வெற்றி பெறுவாய்”, காந்தியடிகளால் கூறப்பட்ட வாக்கியம் இவை. இதில் மூன்றாம் கட்டத்தில் மேலே சொன்ன நிகழ்வு நடைபெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், ஊழல்களால் அதன் துறைகள் வழிந்து கொண்டிருக்கும் வேலையில், அவற்றை சுட்டிக் காட்டி நிவர்த்தி செய்யும்படி கூறும் மக்களை நசுக்கும் முயற்சியை செய்கிறது என்றால், இது மக்கள் விரோதமான அரசாக தான் இருக்க முடியும்.

ஆட்சியாளர்களின் செயல்களை கண்காணிப்பதும், கேள்வி எழுப்புவதும் மக்களின் கடமை. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அதை மறுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஆனால், அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த உரிமையை மறுக்கும் செயல்களில் ஈடுபட்டு மக்களின் மீது பொய்யான வழக்குகளை போடுவதன் மூலம், ‘வாய்மையே வெல்லும்’ என்னும் தன் நோக்கத்துக்கே எதிராக செயல்படுவதால், அறம் சார்ந்து இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்க தகுதியற்றது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. 

அன்புடன்,
ஜெகன்

வியாழன், 20 ஜூன், 2019

தண்ணீர் பஞ்சமும்! வேற்று கிரக அமைச்சரும்!

1) தண்ணீர் பற்றாக்குறையால் சென்னையில் 4000 உணவகங்கள் மூடப்படும் சூழல். பல தங்கும் விடுதிகள் மூடப்படுகிறது.

2) சென்னையில் பல ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்ய இயலாத காரணத்தால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்துகின்றன.

3) ஒரு வீட்டிற்கு 3-4 நான்கு குடம் மட்டுமே மெட்ரோ தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2-3 நாட்களுக்கு ஒரு முறை! நிறைய பகுதிகளில் 4-5 நாட்களுக்கு ஒரு முறை தான் அந்த தண்ணீரும் கூட கிடைக்கிறது.

4) நிலத்தடி நீர் வறண்ட பகுதிகளில் மெட்ரோ குடிநீர் லாரி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு வீட்டிற்கு வழங்கப்படுகிறது!

5) மெட்ரோ இரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் கழிப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன!

6) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா என்று ஆலோசிப்பதாக செய்திகள் வருகின்றன.

7) இன்று ஒரு உணவகம் சென்றிருந்தேன். அங்கு கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

8) நான் வசிக்கும் குடியிருப்பில் இதுவரை தண்ணீர் பிரச்சினை இருந்ததே இல்லை. 20 வருடங்களில் முதல் முறையாக தண்ணீர் பஞ்சம் என்று இங்கு பல வருடங்களாக வசிப்பவர் சொல்கிறார். 

இவை எல்லாம் நிகழும் தருணத்தில் தான், தமிழக அமைச்சர் வேலுமணி வாய்க்கூசாமல் சொல்கிறார், "சென்னையில் தண்ணீர் பஞ்சமே இல்லை. இது வெறும் வதந்தி. நம்ப வேண்டாம்" என்று!

பஞ்சம் என்று ஒப்புக்கொண்டால் கேள்விகள் எழுப்பப்படும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக பஞ்சமே இல்லை என்று பொய் சொல்பவர் தான் இங்கு நமக்கு அமைச்சர்!

சென்ற ஆண்டு மழையே இல்லாததால் தான் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால், சென்னையின் எந்த ஏரியையும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தூர் வாரவே இல்லை என்ற உண்மையை அரசாங்கம் சொல்ல மறுக்கிறது!

சென்னை, மழை மிகையாக பெய்யும் ஒரு பகுதியாக இருந்தும் இத்தகைய பஞ்சம் வருவதற்கு காரணம் அரசாங்கத்திடம் மழைநீர் பொறுப்புடைமை இல்லாதது தான். வருடத்திற்கு சராசரியாக 1400 மி.மீ மழை பொழிவை பெறுகிறது சென்னை. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் 80 TMC கொள்ளளவுள்ள 3600 நீர்நிலைகள் இருந்தும், அரசாங்கம் இவற்றை சரியாக பராமரிக்காத காரணத்தால், பெய்யும் மழையில் அதிகப்படியான நீர் சேமிக்கப்படாமலேயே கடலில் சென்று கலந்துவிடுகிறது!

சென்னைக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 1 TMC தண்ணீரே போதுமானது. ஆண்டுக்கு 12 TMC நீர் தேவை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு சேர்த்து மாதம் 1 TMC என்று வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு 12 TMC தான் அங்கும் தேவை. இந்த மூன்று மாவட்டங்களின் 80 TMC கொள்ளளவுள்ள நீர்நிலைகளை முழுமையாக தூர் வாரி அல்லது கொள்ளளவை இன்னும் அதிகப்படுத்தி இருந்திருந்தால், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வறட்சி வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும். ஆனால், நிலைமை அதற்கு நேர் எதிர்!
(ஒரு TMC என்பது 2832 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும்!)

2015 சென்னை பெருவெள்ளத்தில் 300 TMC நீர் கடலில் சென்று வீணாக கலந்தது. சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூரின் பத்து ஆண்டுகளுக்கு தேவையான நீர் அது! ஆனால், அடுத்த ஆண்டு 2016-ல் 140 வருடங்கள் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்தது! நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் தமிழ்நாட்டில்! காரணம், 2015-ல் பெய்த மழை நீரை சரியாக சேமிக்க தவறியது தான்!

சென்னை குடிநீர் வாரியம் முன்பு ஒரு நாளைக்கு 85 கோடி(850 MLD) லிட்டர் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தது. அது தற்போது 55 கோடி(550 MLD) லிட்டராக படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால், சென்னையின் ஒரு நாள் தண்ணீர் பயன்பாடு, 150-200 கோடி லிட்டர். குடிநீர் வாரியம் தருவதை தவிர மீதம் தேவையான 145 கோடி லிட்டர் நீரை, மக்கள் நிலத்தடியில் ஆழ்குழாய்கள்(Borewell) போட்டு உறிஞ்சி தான் எடுத்துக்கொள்கிறார்கள். 

பல்லாயிரம் கோடி ரூபாய்களை நம்மிடமிருந்து வரிப் பணமாக பெறும் இந்த அரசாங்கம், நாம் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் வைத்திருக்கிறது என்றால், அமைப்பின் அடிப்படையிலேயே பிரச்சினை இருக்கிறது என்பது திண்ணம்.

மழை நீரை முழுவதுமாக கடலில் கலக்கவிட்டு விட்டு, பிறகு கடல் நீரை குடிநீர் ஆக்குகிறோம் என்று சொல்லி பல்லாயிரம் கோடிகளை செலவு செய்வதை தான் தனது நீர் மேலாண்மை திட்டமாக அரசாங்கம் மேற்கொள்கிறது. கடல் நீரை சுத்திகரித்து கிடைக்கும் குடிநீர் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மற்றொரு புறம் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய, நடைமுறையிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமே இல்லாத தேசிய நதிகள் இணைப்பு திட்டம் மூலம் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதாக தவறான தீர்வுகளை முன் வைக்கிறது அரசு. காவிரி நீரை கேட்டால், கோதாவரி நீரை கொண்டு வருவோம் என்று பாசாங்கு காட்டி நம்மை முட்டாளாக்கி ஏமாற்றும் வேலையை தான் இந்த அயோக்கியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்!

கடல் நீர் சுத்திகரிப்பு, நதிகள் இணைப்பு, இவை இரண்டையும் விட மிக மிக எளிமையான, அரசாங்கத்திற்கு வருவாய் தரக்கூடிய நீர்நிலைகளை தூர் வருவதை மட்டும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் செய்வதே இல்லை! காரணம், சட்ட விரோதமாக மணலை கொள்ளையடிப்பதற்கு இது பாதகமாக மாறிவிடும் என்பதால்!

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழாவரம் ஏரிகளை தூர் வார அரசாங்கத்திற்கு ஆகக்கூடிய செலவு 35 கோடி. ஆனால், இந்த நான்கு ஏரிகளையும் தூர் வாரினால் கிடைக்கும் சவுடு மணலை விற்பனை செய்வதன் மூலமே 647 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்கும். அதனால், தூர் வாருவது என்பது ஒரு செலவல்ல, வருமானம். இதைக் கூட செய்யாமல் இருப்பதென்பது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அரசாங்கம் நமக்கு செய்யும் பச்சை துரோகம்!

அடுத்ததாக, பயன்படுத்தப்பட்ட(கழிவு) நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு உபயோகித்தல்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 25 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு தினமும் 52.5 கோடி லிட்டர் பயன்படுத்தப்பட்ட நீர் உற்பத்தி ஆகிறது. அதில் 48 கோடி லிட்டர் நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் கிட்டத்தட்ட 90% பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்கிறார்கள். விரைவில் இதை 100% ஆக்க முனைகிறார்கள்.

சென்னை நிலவரத்தை பார்ப்போம். சென்னையின் மக்கள் தொகை இன்று ஒரு கோடி. ஒரு நாளைக்கு(வறட்சி அல்லாத காலங்களில்) சென்னையின் அனைத்து தேவைகளுக்கும் சேர்த்து பயன்படுத்தப்படும் நீரின் அளவு சுமார் 150 முதல் 200 கோடி லிட்டர்.  சராசரி அளவு 180 கோடி லிட்டர் என்று வைத்துக் கொண்டால், அதில் 85% நீரை சுத்திகரிப்பு செய்தால் கூட தினசரி 153 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும்! ஆனால் நாம் தற்போது சுத்திகரிப்பு செய்யும் நீரின் அளவு 42.7 கோடி லிட்டர் தான், சுமார் 23.72% மட்டுமே. மீதம்  உள்ள 76.27% பயன்படுத்தப்பட்ட நீர் சென்னையின் பல ஏரிகளில் கலந்து நீர்நிலைகளை பாழாக்குவதோடு, வாசம் வீசும் நமது கூவம் நதியிலும் சென்று கலக்கிறது! இப்போது புரிகிறதா ஏன் சென்னையின் மூன்று நதிகளும் சாக்கடையாக மாறிவிட்டது என்று!

இதுவே, 85 சதவிகிதமான 153 கோடி லிட்டர் அளவு பயன்படுத்தப்பட்ட நீரை நாம் சுத்திகரித்து மறுசுழற்சி செய்திருந்தால், தினமும் நம்மால் 153 கோடி லிட்டர் நீரை சேமிக்க முடியும்! இன்று தினமும் வீராணம் ஏரியில் இருந்து விவாசாயத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய 18 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்கு எடுத்துக் கொள்ளாமல், விவாசாயிகளையும் தண்ணீருக்காக தவிக்க விடாத ஒரு சூழலை உருவாக்க முடியும்.

இதை தவிர, நீர் சுழற்சிக்கான(Water Cycle) ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது அவசியம். கடல் மற்றும் இதர நீர்நிலைகளில் இருக்கும் நீரானது சூரிய வெப்பம் காரணமாக ஆவியாக மேலே செல்கிறது. அவற்றின் வெப்பம் குறையும் போது மேலே சென்ற நீராவி மீண்டும் திரவ வடிவம் பெறுகிறது. அவை அதிக அளவில் சேரும் போது மேகமாக உருவெடுத்து அதிக எடை கூடிய பிறகு மழையாக பூமியில் பொழிகிறது. பூமியில் பெய்யும் மழை நிலத்திற்கு அடியிலும், நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் சென்று சேர்கிறது. ஆறுகளில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கிறது. இதுவே ஒரு நீர் சுழற்சி.

நீர் சுழற்சி என்பது பருவநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவநிலை(Climate) என்பது ஒரு பகுதியின் நீண்டகால வானிலையை(Weather Conditions) குறிப்பதாகும். பருவநிலையில் பங்கு வகிக்கும் இரண்டு வானிலை அம்சங்கள் 1) காற்றில் உள்ள ஈரப்பதம் (Humidity) மற்றும் 2) வெப்பநிலை (Temperature). இவை இரண்டுமே நீர் சுழற்சியின் தாக்கம் கொண்டவை.

எனவே, நீர் சுழற்சியை ஆரோக்கியமாக வைப்பது முக்கியம். அதற்கு பசுமை போர்வையை அதிகப்படுத்துவது அவசியம். மரங்கள் அதிகமாக இருந்தால் அதன் வழியே நீராவியாதல்(Evapotranspiration) நிகழும் போது மழை அதிகரிக்கும். மரங்கள் காற்றின் மாசை குறைப்பதால் மழை மேகங்கள் மாசாகாமல் இருக்க பெரும் உதவியாக இருப்பதோடு,  சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும். நமது அரசாங்கமோ, மலைகளையும் காடுகளையும் அழித்து எட்டு வழிச் சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் தான் முனைப்போடு இருக்கிறது.

நாம் வரி செலுத்த தான் முடியும், அரசாங்கத்தை வலுயுறுத்த தான் முடியும். ஆனால் அரசாங்கம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும். மக்கள் வீதிக்கு வர துவங்கிவிட்டனர். இனிமேலும் தாமதிக்காமல் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சரியான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அனைத்து ஜீவராசிகளும் வாழ அரோக்கியமான சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பது ஒரு நல்ல அரசின் அடையாளமாகும்!

அன்புடன்,
ஜெகன்