ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மெரினா காதல்!


வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்றால், சென்னைக்கு வந்தாரை அன்போடு அழைக்கும் நம் மெரினா கடற்கரை என்றே சொல்லலாம்! அவ்வளவு எழில் பொங்கும் ஓர் இடம்.

வெறும் கடற்கரையாக இருந்த நம் தமிழர் கடலான மெரினா கடற்கரைக்கு 1884 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரஸிடென்சியின் ஆங்கிலேய கவர்னராக இருந்த மவுண்ட்ஸ்டுவார்ட் எல்ஃபின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (M.E.Grant Duff) என்பவர் நடை பாதை அமைத்து அதற்குமெட்ராஸ் மெரினாஎன்றும் பெயர் சூட்டியுள்ளார்

மெரினா கடற்கரையை பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. ஒரு புத்தகமென்ன ஒரு நாவலே எழுதலாம். அவ்வளவு வாழ்வையும் வரலாற்றையும் சுமந்து கொண்டிருக்கிறது நமது மெரினா. தினமும் எத்தனை எத்தனை மக்கள், வரலாற்றில் எத்தனை நிகழ்வுகள், எத்தனை மாமனிதர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்றால், சென்னையின் முக்கிய இடங்களில் மெரினா கடற்கரையை நாம் நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழ்நாட்டின் நான்கு முதலமைச்சர்கள்-மக்கள் தலைவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இடம். பல முக்கிய அரசியல் பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற இடம். 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக இளைஞர் பட்டாளம் ஒன்று திரண்ட வரலாற்று சிறப்புமிக்க இடம். இன்று நான்கு பேர் கூடுவதற்கு கூட தடை என்று பூட்டு போடப்பட்டிருக்கும் இடம். மீறினால் குண்டர் சட்டம் நம் மீது பாயும்!

ஜல்லிக்கட்டு போராட்டம், 2017.

தமிழக வரலாற்றில் அரசியலும் மெரினாவும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த ஒரு இடமாகிவிட்டது. உண்மையில் ஒரு கடற்கரைக்கும் அரசியலுக்கும் உலகில் வேறெங்கும் இவ்வளவு தொடர்பு இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. மெரினா, அரசியலுக்கு முக்கியம் வாய்ந்த ஒரு இடமாக மாற ஒரு காரணம் இருக்கிறது என்று கருதுகிறேன். ஒவ்வொரு ஊரிலும் போராட்டம் நடத்துவதற்கு, மக்கள் பெரும் அளவில் ஒன்று திரள்வதற்கு என்று ஒரு பெரிய இடம் இருக்கும். உதாரணத்திற்கு டெல்லியில் ராம் லீலா மைதானம். அது போல் சென்னையில் மக்கள் திரளாக கூட மெரினா மிக பொருத்தமான ஒரு இடமாக இருக்கிறது. சென்னையின் மக்கள் தொகைக்கு ஒரு பெரும் திரள் மக்கள் கூட்டத்தை ஏற்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இடமாக மெரினா இருக்கிறது.

உலகின் இரண்டாவது மிக நீலமான நகர்புற கடற்கரை மெரினா. இந்தியாவின் மிக நீலமான கடற்கரையும் நம் மெரினா தான். தம் வாழ்வின் எத்தனை எத்தனை தருணங்களை மெரினா சந்தித்திருக்கிறது என்று சென்னை வாசிகளை கேட்டால் மனம் திறந்து பல கதைகள் சொல்வார்கள். 

கலங்கரை விளக்கம் மேலிருந்து மெரினா கடற்கரை.

பல ஆயிரம் மக்கள் தங்கள் காலை பொழுதின் நடைபயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கும் மெரினாவை பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமா, பலர் தங்கள் நண்பர்களுடன் விளையாடவும் மெரினாவிற்கு அன்றாட வருகிறார்கள். பல குழுக்களாக ஹியூமர் கிளப் மக்கள் காலையில் ஒரு கூட்டமாக நின்று சிரித்து பழகுவதை பார்த்திருக்கிறேன்.

காலை சூரிய உதயம், மெரினா.

விடியற்காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டால் வண்டியில் மெரினாவிற்கு சென்று அலைகளை ரசித்துவிட்டு சூரியன் உதயமாவதை கண்டு ரசித்துவிட்டு வரும் பழக்கம் எனக்கு உண்டுஅதே போல் கடற்கரையில் இருக்கும் மெரினா நீச்சல் குளத்திற்கு 29A பேருந்தில் பெரம்பூரில் இருந்து வந்து குளித்துவிட்டு சென்ற அனுபவமும் உண்டுஎன் மாமா வீடு கடற்கரைக்கு 1.5 கி.மீ தொலைவில் இருக்கிறது என்பதால்எனது பள்ளி பருவத்தில் விடுமுறை நாட்களில் எப்போது அவரது வீட்டிற்கு சென்றாலும் என் மாமா மற்றும் பெரியம்மா மகன் மகள்களுடன் நடந்தே கடற்கரைக்கு சென்று ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்இது போல் எத்தனை எத்தனை குடும்பங்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக இந்த மாபெரும் கடற்கரையில் கழிக்கிறார்கள் என்று நினைக்கும் போதே அதன் பெருந்தன்மை நமக்கு புரிகிறது. 

நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றால் அன்று மாலை ஒரு சிறந்த பொழுதாகிவிடும் நமக்கு. அவ்வளவு அழகான சூழல், வீசும் காற்று என கடற்கரைக்கு காலையில் ஒரு அழகான முகம் என்றால், மாலை அதன் இன்னொரு அழகான தோற்றத்தால் தன்னிடம் வருபவரை ஆசுவாசப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்கிறது இந்த விலைமதிப்பில்லா பொக்கிஷம்

மாலை பொழுது, மெரினா கடற்கரை.

ஒரு முறை மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்கள் தனக்கு பிடித்த சுற்றுலா தலம் என்று மெரினாவை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம் மிக அழகாக இருந்தது. மிக எளிமையாக அனைவரும் வந்து செல்லக்கூடிய இடமாக மெரினா இருக்கிறது என்று சொல்லி இருந்தார். எத்தனை உண்மை இது என்று நாம் சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். நடந்து வருபவரையும், அரசு பேருந்தில் வருபவரையும், இரு சர்க்கர வாகனத்தில் வருபவரையும், சொகுசு காரில் வருபவரையும் என அனைத்து தரப்பு மக்களையும் ஒரு சுற்றுலா தலம் திறந்த மனதோடு வரவேற்க முடியும் என்றால் அது மெரினாவாகத் தான் இருக்க முடியும்

மெரினா என்றால் சட்டென்று நம் நினைவில் தோன்றும் விடயங்களில் சிலைகளும் ஒன்று. மெரினா கடற்கரையில் முதன்முதலில் நிறுவப்பட்ட சிலை என்றால் 1959 ஆம் ஆண்டு நிறுவப் பட்ட உழைப்பாளர்கள் சிலை தான். அதே ஆண்டு மகாத்மா காந்தி சிலையும் நிறுவப் பட்டது. பிறகு 1968 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் உலக தமிழ் மாநாட்டின் போது திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், பாரதியார், பாரதிதாசன், ஜி.யு.போப், வீரமா முனிவர், கால்டுவெல் போன்றோர் சிலைகள் நிறுவப்பட்டன. மற்ற சிலைகள் பின்னர் வெவ்வேறு காலங்களில் நிறுவப்பட்டன

உழைப்பாளர் சிலை, மெரினா கடற்கரை.

மெரினா கடற்கரை ஆரம்பிப்பது அண்ணா சமாதி அருகில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3.1 கி.மீ. தொலைவு என்றால் அதன் மணல் பரப்பு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தொடங்கி பெசன்ட் நகர் கடற்கரை வரை சுமார் பதிமூன்று கி.மீ தொலைவு என்றே சொல்லலாம்.

இந்த 3.1 கி.மீ தொலைவில் வடக்கே அண்ணா சமாதி அருகே கூவம் நதிக்கரை கடலில் கலக்கும் இடம் இருக்கிறது. கடற்கரையின் இந்த பகுதியில் பல கடைகள் இருக்கும். முக்கியமாக கிளிஞ்சல் மற்றும் பிற கடல்சார் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கும். பல உணவு விடுதிகள் கடற்கரை முழுவதும் இருக்கும். அதே போல் மெரினாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் காந்தி சிலை பின்புறம் பல கடைகள் அமைந்திருக்கும். அவற்றில் உணவு பொருட்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் எல்லாம் கலந்திருக்கும். மாலை வேலையில் தினமும் இந்த இரண்டு முனைகளும் திருவிழா போல் காட்சியளிக்கும். தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து போகும் இடம் மெரினா. கோடை மற்றும் விடுமுறை நாட்களில் அதுவே அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். குறிப்பாக காணும் பொங்கல்தினத்தன்று கடல் அலையோடு சேர்ந்து மக்கள் அலையும் மெரினாவில் வீசம் என்றால் அது மிகையாகாது. 

காணும் பொங்கல், 2019 - மெரினா கடற்கரையின் ஒரு பகுதி.

கூவம் நதி ஒரு புறம் என்றால் கடற்கரையின் தெற்கே கம்பீரமாய் நிற்கும் கலங்கரை விளக்கம் மறுபுறம். கலங்கரை விளக்கம் மேலிருந்து மொத்த மெரினாவின் மிக அழகான பார்வை அற்புதமானது. கலங்கரை விளக்கம் பின்புறம் வரிசையாக இருக்கும் வாசம் வீசும் மீன் கடைகள். மீனவர்கள் வசிக்கும் குடில்களும் அருகே இருக்கிறது. மெரினாவை அலங்கரிக்கும் விடயங்களில் முக்கியமானது மீனவர் படகுகளும் தான். மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு தயாரித்தல், முத்து குளித்தல் போன்ற கடல்சார் வணிக தொழில்களை கொண்ட தமிழர் பண்பாட்டு நிலத்திணையானநெய்தல்பகுதி மக்களான மீனவர்களின் வீடு தான் இந்த கடற்கரை என்பதே உண்மை. அவர்கள் தங்கள் பகுதிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அன்றும் இன்றும் பல போராட்டங்களை செய்து வருகின்றனர்

நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்பு மற்றும் மீன் அங்காடி, மெரினா கடற்கரை.

பிராணிகள் என்றால் மெரினாவில் காக்கை கூட்டம் முன்பு அதிகமாக இருக்கும். ஆனால் சமீபமாக பறவை ஆர்வலர்கள் சிலரால் புறா கூட்டம் காலை வேலையில் கூடுகிறது. அவர்கள் தினமும் புறாக்களுக்கு அரிசி வகை உணவுகளை வைப்பதால் இவ்வாறு ஆயிரக்கணக்கில் பறவைகள் சிறகடிப்பதை காண முடிகிறது. சவாரி செய்ய குதிரைகள் சில எப்போதும் நம் மெரினாவில் இருக்கும். நாய்களும் மெரினாவின் செல்லப் பிராணிகளே

காலை வேலையில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள், மெரினா கடற்கரை.

மாலை நேரங்களில் போரடித்தால் மெரினாவிற்கு செல்வது எனது வழக்கம். நடைபயணம் செய்ய, காற்று வாங்க, ஆசுவாசப்பட்டுக்கொள்ள, கற்பனையாக சிலவற்றை எழுத, மீன் வாங்க என பல வேலைகளை செய்ய முடிகிறது மெரினாவிற்கு சென்றால். அப்படி செல்லும் வேலையில் பள்ளி மாணவர்கள் சிலர் சுண்டல் விற்பனை செய்து போகும் பொழுது அவர்கள் அமைதியாக ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள்

புதுப்பிக்கப்பட்ட மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகில்.

மெரினாவை அழகு படுத்தும் வேலைகள் பலமுறை நடந்தாலும் 2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட  சீரமைப்பு பணி மிக முக்கியமானது. மெரினாவை முற்றிலும் அழகாக மாற்றியமைத்தது என்றே சொல்லலாம். இத்தகைய கடற்கரையை மேன்மைபடுத்தவும் பாதுகாக்கவும் மாநகராட்சி பல முயற்சிகள் எடுத்தாலும் மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடற்கரை ஒரு சுற்றுப்புற சூழலியல் சார்ந்த இடம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை பல்வேறு வகைகளில் அசுத்தம் செய்வதையும் மாசு படுத்துவதையும் முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.  

புல்வெளி, மெரினா கடற்கரை.

என்னைப் பொறுத்த வரை மெரினா என்றால் அன்பு, மெரினா என்றால் அரவணைப்பு, மெரினா என்றால் புரட்சி, மெரினா என்றால் ஜில்காற்று, மெரினா என்றால் அலைகள், மெரினா என்றால் காந்தி சிலை, மெரினா என்றால் கலங்கரை விளக்கம், மெரினா என்றால் நினைவேந்தல், மெரினா என்றால் தமிழர் கடல்.

அன்புடன்,
ஜெகன்.  

வெள்ளி, 4 ஜனவரி, 2019

ஆழ்நிலை தியானம்



சமீபத்தில் நான் செய்ய தொடங்கிய ஆழ்நிலை தியானத்தின் அனுபவம் குறித்த கட்டுரை இது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். ஆன்மீகம், தியானம் போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவராக நீங்கள் இருந்தால் இப்போதே உங்கள் நேரத்தை இதில் வீணடிக்காமல் வேறு வேலைக்கு செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், ஒருவரின் அனுபவப் பகிர்வை படிக்க விருப்பம் இருந்தால் தொடரும்படி கேட்டிக் கொள்கிறேன்.

மேலே கூறியது போல் இக்கட்டுரை ஆழ்நிலை தியானம் குறித்த எனது அனுபவம் பற்றியது என்றாலும், தியானம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுவது இக்கட்டுரையை முழுமையாக புரிந்துகொள்ள அவசியம் என்று கருதுகிறேன்.

தியானம் என்றால் என்ன?
மன அமைதிக்காக மனிதர்கள் கண்களை மூடியபடி அமர்ந்து கொண்டு இருப்பது. இதற்கு வரையறுக்கப்பட்ட நேரம் என்பது கிடையாது. பத்து நிமிடங்கள் தியானம் செய்பவர்களும் உண்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்பவர்களும் உண்டு. புராணங்களில் நாம் கேட்டிருப்போம். பல வருடங்கள் தியானம் செய்த முனிவர் இவர் என்றும். வாழ்க்கையையே தியானத்தில் கழித்தவர் என்றும்.

பழங்கால நடைமுறை என்பது அவ்வாறாக தான் இருந்திருக்கிறது. துறவியாக செல்பவர்களே தியானம் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கும் ஒரு இல்லற வாழ்க்கை இருந்திருக்கிறது!

பல கடவுள் சிலைகளை நாம் பார்த்தால் தெரியும், கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யும் ஒரு உருவம் இருக்கும். தீவிர தியானத்தில் இருந்தவர்களையே கடவுளாக நாம் வழிபட்டுக் கொண்டிருப்பது புரியும். இவர்கள் அனைவரும் தியானத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது தான் உண்மை. கால போக்கில் பல்வேறு காரணங்களால் உருவ வழிபாட்டுக்குள் இவர்கள் கொண்டு வரப்பட்டு கடவுளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டார்கள். பிறகு அதுவே மதங்களாகவும் வளர்ந்துவிட்டது. இன்று உலகில் எத்தனை மதங்கள் இருக்கிறது என்று பார்த்தால் ஆயிரத்துக்கும் அதிகம்.

மதங்கள் எப்படி ஒன்றுக்கொன்று வேறுபட்டதோ, அதே போல் தான், தியான முறைகளும். தியான முறைகள் பல இருக்கின்றது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மருத்துவம் போல் தான் இதுவும். நாட்டு வயித்தியம், அலோபதி, ஹோமியோபதி, அக்குபங்சர் போல. எப்படி ஒரு நேரத்தில் ஒரு மருத்துவ முறையை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா அதே போல, ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு தியான முறையை மட்டுமே செய்து பழக முடியும்.

தியானத்தின் பிம்பம்




தியான முறைகளில் குறிப்பாக சிலவற்றை சொல்கிறேன்.
1)   மனதை ஒருமுகப்படுத்துதல் (Concentration)
2)   ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்வது (Contemplation)
3)   மந்திரங்களை சொல்வது (Chanting)
4)   ஆழ்நிலைக்கு செல்வது (Transcending/Transcendental)

எந்த ஒரு தியான முறையாக இருந்தாலும் முறையாக பயிற்சி பெற்று செல்வதே சரி. இல்லையேல், அது எதிர்வினைகளை கொடுக்கும். அப்படி சில வருடங்களுக்கு முன்பு பயிற்சியை முழுமையாக பெறாமல் தியானத்தை செய்த போது சில எதிர்வினைகளை சந்தித்து மனநிலை சிக்கல்களுக்கு நான் உள்ளானேன். அதிலிருந்து நான் வருடக்கணக்கில் தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன். மனநல மருத்துவர் தியானம் செய்ய வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார். இருப்பினும் தியானம் செய்வது, மன அமைதி பெறுவது போன்ற செயல்களில் இயற்கையாகவே எனக்கு ஆர்வம் இருப்பதால் மனநல மருத்துவரிடம் தியானமே செய்யக் கூடாதா என்று கேட்டதற்கு அவர் அறிவுறுத்திய ஒரு முறை தான்ஆழ்நிலை தியான முறை’ (Transcendental Meditation). 

மகரிஷி மகேஷ் யோகி, ஆழ்நிலை தியான கூடம் - நிறுவனர்



சென்னையில் சேத்துப்பட்டில் இருக்கிறது அந்த தியான கூடம். மகரிஷி மகேஷ்யோகியின் ஆழ்நிலை தியான பயிற்சி கூடம். அவர்கள் நடத்தும் பள்ளி தான் மகஷிரி வித்யா மந்திர் பள்ளி. இங்கு தியானம் பயில்வதற்கு முன்பாக ஆழ்நிலை தியானம் குறித்த ஒரு அறிமுக கூட்டம் ஒன்று வைக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு அந்த அறிமுக கூட்டத்திற்கு முதல்முறையாக சென்றிருந்தேன். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆழ்நிலை தியானத்தின் பல நன்மைகளை எடுத்துரைத்தார்கள். கேட்க எளிமையாகவே இருந்தது. இந்த தியான முறையும் அவ்வளவு எளிமையான ஒன்றாகவே இருந்தது கற்ற பிறகு
                           
விருப்பமாக இருந்ததால் பயிற்சி கட்டணம் செலுத்தி தியானத்தை கற்றுக் கொண்டேன். தினமும் தியான பயிற்சி என சில மாதங்கள் தொடர்ந்து செய்தும் வந்தேன். ஆழ்நிலை தியான முறை என்பது ஒரு மந்திரச் சொல் ஒன்றை நமக்கு மட்டும் பயிற்றுவிப்பவர் சொல்லிக் கொடுப்பார். தியானம் செய்யும் போது அதை மனதில் நினைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள். எனக்குள் எழுந்த பெரிய முரணே மந்திர சொல் என்பதை பயன்படுத்தி செய்யும் முறை தான். காரணம், கடவுள்-மூடநம்பிக்கை போன்றவற்றில் இருந்து விலகி பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஒரு கொள்கையை தேர்ந்தெடுத்த பின்னர் எப்படி மந்திரம் என்ற ஒரு விடயத்தை பயன்படுத்துவது. அதை எப்படி நம்புவது என்று தான். இந்த மந்திர சொல் என்பது அர்த்தமற்ற ஒரு சொல் தான். அது ஒரு அதிர்வை (vibration) கொண்ட ஒரு சொல். அவரவர் இயல்புக்கு ஏற்றால் போல் வேதங்களில் இருந்து ஒரு மந்திரச் சொல் ஒன்று கொடுக்கப்படும் என்று அறிமுக கூட்டத்திலே சொல்லிவிடுவார்கள்.

வேதங்கள், மந்திரம் போன்றவை எல்லாம் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானதாயிற்றே என்று ஆழ்நிலை தியானம் செய்வதையே ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டேன். இரண்டு வருடங்கள் ஆயிற்று. வீட்டில் எனது அம்மா மற்றும் அக்கா நீ ஏன் தியானம் செய்வதில்லைஎன்று கேட்ட பொழுது நான் சொன்ன காரணமும் இது தான். கொள்கை முரண் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அதனால் தான் என்றேன். அதற்கு அவர்கள் இருவரும் தியானம் என்பது மன அமைதிக்காக செய்வது. இதை நீ தொடர்வதால் எந்த தவறும் கிடையாது என்றார்கள். உன் மனம் அமைதியாக இருக்கும் என்றால் அதை செய்வதில் தவறில்லை என்றார்கள்.

என் மனமும் அவர்கள் சொன்ன கோணத்தில் யோசிக்க/பார்க்க தூண்டியது. இயல்பாகவே ஆழமான சிந்தனை கொண்ட எனக்கு முதலில் தவறு என்று தோன்றிய விடயம் பிறகு மன அமைதி, நலம் என்ற ஒற்றை இலக்கை பற்றி யோசித்த பொழுது சரி மீண்டும் தியானம் செய்யலாமே என்று எண்ண தோன்றியது. ஆழ்நிலை வகுப்புக்கு சென்று பயிற்சியை ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டேன். மீண்டும் தியானம் செய்ய தொடங்கினேன்.

தியானத்தின் பலனைகளை மீண்டும் அனுபவிக்கத் துவங்கினேன்.

ஆழ்நிலை தியானத்தின் சிறப்பான அம்சம் என்பது அது நமக்கு தரும் ஓய்வு. தூக்கத்தில் பெறும் ஓய்வை விட இரு மடங்கு ஓய்வு ஆழ்நிலை தியானம் செய்யும் பொழுது கிடைக்கிறது என்பது ஒன்று. மற்றொரு முக்கியமான அம்சம் தியானத்தில் கொடுக்கப்படும் மந்திர சொல்லை நினைக்கும் வேலையில் நம் மனதில் தேங்கிக் கிடக்கும் மன அழுத்தமானது எண்ணங்களாக தோன்றி வெளியேற்றப்படுகிறது. இவை இரண்டும் தியானம் செய்யும் அந்த 20 நிமடங்களில் நிகழ்கிறது. காலையிலும் மாலையிலும் தியானம் செய்யும் பொழுது மன அமைதி என்பது கிடைக்கிறது. மன அமைதி கிடைக்கும் பொழுது அந்த நாள் நன்றாக அமைய வழிவகை செய்கிறது.

கொள்கை என்பதை கடந்து நன்மை என்று கருதி செய்வதால் எந்த ஒரு மன வருத்தமும் இப்போது எனக்கு தியானம் செய்வதால் இல்லை.

எந்த அறிவியலும் இல்லாமல் எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் ஒரு மனிதன் காலையும் மாலையும் ஒரு 15-20 நிமிடங்கள் அமைதியாக அமரும் பொழுது இயல்பாகவே அவனுக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறது. அதையே அறிவியல் கோணத்தில் விரிவாக அவர்கள் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். மன அமைதியை தேடும், ஆழ்ந்த சிந்தனையை இயல்பாக கொண்ட எனக்கு ஆழ்நிலை தியானம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கருதுகிறேன்.

அன்புடன்,
ஜெகன்