வியாழன், 10 செப்டம்பர், 2020

நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?

இன்று கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகளவில் முடக்கம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து வாடிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதற்கு ஒற்றை காரணம் மட்டுமே உள்ளது. அது, விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே!

இன்றுவரை சுமார் 9 லட்சம் உயிர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் உலகின் பணக்காரர்களுக்கு பரவாமல் இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுத்திருக்குமா என்றால், நிச்சயம் எடுத்திருக்காது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ‘தற்கொலைகள்’.


உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக சுகாதார மையத்தின் 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7,93,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 79% பேர் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


 

இந்தியாவில் இது மிகவும் மோசம். சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2019-ல் மட்டும் இந்தியாவில் 1,39,123 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 92,083(66.2%) பேர் ஆண்டு வருமானமாக 1 லட்சத்துக்கும் கீழே உள்ளவர்கள். தற்கொலை செய்துகொண்ட மேலும் 41,197(29.6%) பேரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை உள்ளவர்கள். ஆகமொத்தம் 95.8% பேர் குறைவான வருமானம் ஈட்டுபவர்களே.

தற்கொலை என்பது மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சனைகளால் மட்டுமே வருவதில்லை. சமூக, பொருளாதார பிரச்சனைகளும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாகவே மேலே குறிப்பிட்ட சமீபத்திய இந்த அறிக்கை உள்ளது.

இந்தியாவில் 2019-ல் தற்கொலை செய்தவர்களில் 10,281(7.4%) விவசாயிகளும், 32,559(23.4%) தினக்கூலி தொழிலாளர்களும், 11599(23.4%) வேலையில்லாதவர்களும் உள்ளனர்.

மொத்த தற்கொலை செய்தோர் எண்ணிக்கையில் 93,061(66.89%) பேர் 18-45 வயதுடைய இளைய சமூகத்தினரே!

தற்கொலை செய்து கொண்டவர்களில் 21,359(15.4%) பேர் இல்லத்தரசிகள். மொத்த பெண் தற்கொலைகள் 41,493(29.8%) பேர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 49.5% தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.

நகர்புறங்களில் நடைபெறும் தற்கொலைகளில் சென்னைக்கு முதலிடம் – 2461 மரணங்கள்!

விவசாயிகள், தினக்கூலிகள், வேலையில்லாதவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுபவர்கள் குறைந்த வருமானம் ஈட்டக்கூடியவர்கள் அல்லது வருமானமே இல்லாதவர்களாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதி செய்யும் விதமாக, பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலே படித்தவர்கள் மொத்த தற்கொலை சதவீதத்தில் வெறும் 3.7% மட்டுமே உள்ளனர்.

இதன் மூலம் கல்வியும், வருமானம் ஈட்டும் சூழலும் ஒருவருக்கு இருந்தால் தற்கொலை செய்யும் சந்தர்ப்பத்தை குறைக்க முடியும் என்பது புரிகிறது.


 

இந்திய துணைக்கண்டத்தின் பிரதான தொழில் விவசாயம். ஆனால், விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலைக்கு வங்கிக் கடன்கள் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரு நிறுவன முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகள் வரை கடனை தள்ளபடி செய்யும் அரசுகள், விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான வங்கி கடன் சுமையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசம் அடைவதும் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உரிய நீர் மேலாண்மை ஏற்படுத்துவதோடு, காடுகளை அழிக்கும் போக்கையும் அரசுகள் கைவிட வேண்டும்.  

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் நம் மனம் மிகுந்த வேதனையில் இருக்கும் போது ஏற்படுகிறது. அந்த சிந்தனையில் இருந்து நாம் வெளியே வந்தால் நிச்சயம் தற்கொலையை தவிர்க்க முடியும். அப்படியான சூழலை கடந்து வந்த சிலரில் சமீப பேட்டிகளில் சாதனையாளர்களான நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கடந்த காலத்தில் தங்களுக்கு தற்கொலை சிந்தனை ஏற்பட்டு இருந்ததாக கூறுவதை பார்க்க முடிந்தது.

உலகில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்படி ஒருவர் தற்கொலையில் இறக்கும் வேளையில் சுமார் 20-க்கு அதிகமானோர் தற்கொலையை முயற்சித்துக் கொண்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார மையம்.


‘நாம் தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்ற இந்த கட்டுரைக்கான பதில் இதோ...

எனக்கும் ஒரு முறை தற்கொலை செய்யும் எண்ணம் எழுந்துள்ளது! அடுத்த சில நிமிடங்களில் என் கைபேசியில் தற்கொலை தடுப்புக்கான உதவி எண்களை தேடினேன். அரசின் தற்கொலை தடுப்பு சேவைக்கான எண்.104-ஐ உடனே தொடர்புகொண்டு ஒரு ஆலோசகருடன் பேச முடிந்தது.

நம் பிரச்சனையின் காரணத்தை கேட்டு புரிந்துகொண்ட அவர், பிரச்சனை ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று மிக நேர்த்தியாக புரிய வைத்து தற்கொலை சிந்தனையில் இருந்து நம்மை மீளச் செய்கிறார்.

அந்த தருணத்தில் நமக்கு தேவை, நம் மனதை ஆட்கொண்டிருக்கும் அந்த சிந்தனையில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வெளி.

இதனால் பிரச்சனை தீருமா என்றால், அதை எதிர்கொள்வதற்கான ஒரு சிறிய உதவியை நிச்சயம் அது தரும். நீச்சல் தெரியாமல் குளத்தில் தவிக்கும் ஒருவருக்கு கிடைக்கும் நீச்சல் குழாய்/மரக்கட்டை போன்றது அந்த உதவி. நீந்தப் பழகுவது நம் அவசியம்.

நினைவில் கொள்ளவும் – தற்கொலை தடுப்பு ஆலோசனை எண்.104!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தடுப்பு தினம்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை இணைப்பு: 

https://ncrb.gov.in/sites/default/files/Chapter-2-Suicides_2019.pdf

அன்புடன்,

ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக