புதன், 28 டிசம்பர், 2016

செல்-வாக்கு


கட்ட பஞ்சாயத்துக்கள் ஒழிந்து ஜனநாயக முறைப்படி மக்களின் ஆட்சி நடைபெறவே தேர்தல்கள் நடைபெறுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா. அதில் பல கட்சிகள். பல வேட்பாளர்கள். பல வாக்குகள். வாக்குச்சாவடிக்குள் நாம் அனைவரும் சென்று வாக்களிப்பது  குறைந்துக்கொண்டே போக போக வாக்கு பதிவு எந்திரங்கள் யாவும் செல் அரித்து போய்விடும்!
செல் என்றால் ஆங்கிலத்தில் இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது விற்பனை செய்வது. நாம் போய் வாக்கு எந்திரத்தின் பொத்தானை அழுத்தாத ஒவ்வொரு வாக்கும் விற்பனையாகிவிடுகிறது! இது ஒரு கற்பனையாகவே இருந்தாலும் இதன் முக்கியத்துவம் என்னவென்பதை பார்ப்போம்.
2011-ல் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் முன் அப்பொழுது சென்னையில் நிகழ்ந்த ஒரு நாடகத்தின் கதை சுருக்கம் வருமாறு..
ஒரு ஊரில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து தங்கள் கடமையை செய்வார்கள். ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் வாக்களிக்க இயலாத ஒரு நிலை உருவாகிவிடும். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும். எண்ணிக்கை முடிவில் இரண்டு பெரிய கட்சிகளுமே சரிசமமான வாக்குகளை பெற்றிருக்கும். வாக்காளர் பட்டியலை பார்த்தால் ஒரே ஒரு பெண் மட்டும் வாக்குசாவடிக்கு சென்று தன் வாக்கிணை பதிவு செய்திருக்க மாட்டாள். இப்பொழுது இரண்டு கட்சிகளுக்குமே அந்த பெண்ணின் வாக்கு மிக முக்கியமானதாகிவிடும். அப்பொழுது தான் வெற்றி யாருக்கு என்று தெரியும். அந்த பெண்ணிடம் இரு கட்சி தரப்பில் இருந்தும் வந்து கெஞ்சுவார்கள். அவள் தன் வாக்கை மாறாக ‘யாருக்கும் இல்லை'(None Of The Above) என்று தேர்வு செய்து விடுவாள். அந்த ஊருக்கு தலைவனோ தலைவியோ இல்லாத ஒரு நிலை உருவாகிவிடும்! அத்துடன் நாடகம் நிறைவு பெற்றது.
ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் மதிப்பை எடுத்து காட்டும் விதமாக இந்த நாடகம் அமைந்திருந்தது. ஒரு தொகுதியில் எத்தனை சதவிகிதம் வாக்குபதிவு நடைபெற்றதோ அங்கு ஜனநாயத்தின் மதிப்பும் கூடுகிறது. குறைவான வாக்குபதிவு நடைபெற்றால் அங்கு அதன் மதிப்பு குறைவாக உள்ளது என்றே பொருள். இது வேறு யாராலும் முடிவு செய்ய படுவது அல்ல. இதற்கு எந்த அரசியல் கட்சியையும் குறை கூற முடியாது. காரணம், உங்கள் வாக்கு உங்கள் உரிமை! சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் நம் உரிமையை நாம் பயன்படுத்தாமல் வேறு யார் வந்து பயன்படுத்துவார்கள்?
அதே போல் தன் வாக்கை அரசியல் கட்சிகளுக்கு விற்பது! அவர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் அரசியலின் ஊடாக சம்பாதித்த பணம். அதை நமக்கு திரும்பவும் சிதறவிட்டு ஏமாற்றும் முயற்சி. நமது நாட்டில் மூன்று விதமான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம். இதுவரை கூறியவை இந்த மூன்றுக்கும் பொருந்தும்.
எனக்கு இந்த தேர்தல் முறை பிடிக்கவில்லை. யாரும் சரியானவர்கள் அல்ல போன்ற எந்த காரணத்தை முன்வைத்தாலும் அதை பதிவு செய்து விடுங்கள். காரணம் அது உங்களை மட்டும் பாதிக்காது. அனைவரையும்  சேர்த்தே பாதிக்கும்.
பிடிக்கவில்லையா, நோட்டா (None Of The Above) என்ற தேர்வை பதிவு செய்து விடுங்கள். அதற்கு முன் வாக்கு பதிவு எந்திரத்தில் தேர்தல் களத்தில் நிற்கும் சுமார் 20 வேட்பாளர்களை கவனியுங்கள். கட்சிகள் சரி இல்லை என்றால், ஒரு 5 முதல் 10 கட்சிகள் வரை நிற்கும். சுயேட்சையாக 10 வேட்பாளர்கள் வரை நிற்பார்கள். அவர்கள் யாரும் சரி அல்ல என்றால் நோட்டா-வை தேர்வு செய்யுங்கள். இதை தான் நம் தேர்தல் ஆணையமும் சொல்லிக்கொண்டே வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும். அவர்கள் பொறுப்புடன் கேட்கும் இணைய தளம் மூலம் வாக்குபதிவு செய்யும் ஒரு சூழல் உருவாகும் வரை கப்பலிலோ அல்லது விமானத்திலோ வந்து தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு போகவேண்டும்.
தேர்தல்கள் முடிவடைந்த பின் தலைவர்கள் தேர்வாகிறார்கள். ஆட்சி அமைத்து சட்டங்கள் கொண்டுவருகிறார்கள். அதை செய்வதற்காக நம் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளும் மதிப்புகளும் ஏராளம். இன்றைய குறுஞ்செய்திகள் ஊடாக நாம் அதனை படித்திருப்போம். ஒரு வருடத்திற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு சலுகைகள் என்றும், ஐந்து வருடங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்றும், அனைத்திற்குமான மதிப்பு என்ன என்றும். இவை எல்லாம் அவர்கள் தங்கள் கடமையை மக்களுக்கு சரியாக செய்யவே.
இத்தனை வருடங்களாக நடந்தவை கொஞ்சம் நஞ்சம் ஊழல்கள் அல்ல. மிகப் பெரிய ஊழல்கள். இந்த ஊழல் செய்தவர்கள் கைதாவார்கள் பின் விடுதலையும் ஆவார்கள். ஊழல் பணம் தொலைந்து போய் விடும். இது தான் நடைமுறையில் உள்ளது. அரசியலில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குள் இருக்கும்.
இது காலப்போக்கில் நம் தொண்டையை நெறிக்கும் அளவிற்கு செல்லும்! நாமெல்லாம் வயிற்றுக்கு உணவை தான் உட்கொள்கிறோமா அல்ல வேறு எதையாவது சாப்பிடுகிறோமா?? சோறு, காய்கறிகள், பழங்கள், இறைச்சி. இவைதான் என்றால் அதனை ஆசை தீர உட்கொள்ளுங்கள். இன்றைய கார்ப்பரேட் முதலைகள் இயற்கை(கரிம) விவசாயத்திற்குள் நுழைகிறோம் என்று சொல்லிக்கொண்டு கம்பு, களி போன்றவற்றை நம் வாயில் அடைக்க முயல்கிறார்கள். அவை எல்லாம் நல்லது தான். ஆரோக்கியமானது தான். காரணம் இன்றைய பயிர்களில் போடப்படும் பூச்சிக்கொல்லி உரங்கள் தான் நம் உணவின் தரத்தை மோசமாக்கிவிட்டது. இயற்கை(கரிம) உரங்கள் போதும். ஏற்கனவே சாப்பிடும் இயற்கை உணவுகளை செம்மை படுத்தும் இயற்கை உரங்கள் போதும்.
இதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வந்து நமக்கு செய்து தரவேண்டும் என்று எண்ணுவோமேயானால் அதோ கெதி தான். அதனால் தான் இன்று உலகின் கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோட்டுக்கு அந்த பக்கம் இருக்கிறார்கள். உலகின் ஒரு சதவிகிதம் பேர் மீதம் உள்ள தொண்ணூற்றொன்பது சதவிகித மக்களை விடவும் பணக்காரர்களாக!
அரசியல்வாதிகளை தன் கைக்குள் வைத்திருக்கும் இவர்கள், இவர்களுக்கு சாதகமாகவே அரசியல் சூழலை உருவாக்குவார்கள். இதற்கு உதாரணம் மிகவும் திறமை வாய்ந்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு வரும் நெருக்கடிகள் தான். அதற்கு தீர்வு, அடுத்து வருபவரும் இன்னொரு ரகுராம் ராஜனாகவே இருக்க வேண்டும்!
அரசியல்வாதிகள் இவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கையில் அவர்களின் தவறுகளை தடுத்து நிறுத்தவே ஐந்து வருடங்களில் மூன்று தேர்தல்கள் நடைபெறுகின்றது. நம் வாக்கை பயன்படுத்தி நம் செல்வாக்கை காப்பாற்றுவோம்.
அன்புடன்
ஜெகன்
(23-06-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக